அதிக உடல் பருமன் உடையவர்களின் இருதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்கள் மீது கோழுப்பு படிவம் படிந்து கடினப்பட்டு போவதால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மிக்சிகன் பல்கலைக் கழகத்தின் இதயவியல் மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், உடல் பருமனுக்கும், இருதய நோய்களுக்கும் உள்ளத் தொடர்புக்கு முதல் முறையாக ஆதாரம் கிடைத்துள்ளது. நமது உடலில் சேரும் அதிகப்படியான விஸ்செரல் (இதயம், நுரையீரல் ஆகிய உடற்பகுதிகள் சார்ந்த) கொழுப்புத்தான் அதற்கு காரணம் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
உடல் திசுக்களில் கொழுப்புப் பொருட்கள் சேரும் இடத்தைச் சுற்றி உருவாகும் வீக்கம் இருதயத்துக்கு இரத்தத்தை கொண்டு சென்று மீண்டும் எடுத்து வரும் இரத்த நாளங்களை தடிப்படையச் செய்வதால் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் வருவதாக கண்டறிந்துள்ளனர்.
சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள், இந்த உடல் வீக்கங்களை குணமாக்க உதவுவதுடன் மேற்கொண்டு இரத்த நாளங்கள் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். யு.எம். மருத்துவப் பள்ளியில் இருதயவியல் துறையில் இணைப் பேராசிரியராகவும், விஏ ஆன் அர்போர் ஹெல்த் கேர் சிஸ்டம் விஞ்ஞானியுமான டேனியல் இட்ஸ்மேன் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
இரத்த ஓட்டத்தை தடைப்படுத்தும் ஆத்ரோசெலாரோஸிஸ்-க்கும், உடலில் ஏற்படும் வீக்கத்துக்கும் தொடர்பு உள்ளதா என ஆய்வாளர்கள் கண்காணித்ததில் ஆத்ரோசெலாரோஸிஸ் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படுவதுதான் மாரடைப்புக்கும், ஸ்டோக்கும் காரணம் என்பது தெரியவந்துள்ளது. நமது உடலின் நோய் தடுப்பு இயக்கம், சில திசுக்களால் பாதிக்கப்படும் போது நோய் தடுப்பு திசுக்கள், மூலக்கூறுகள் பாதிக்கப் படுகின்றன.
இதற்காக விஞ்ஞானிகள் எலிகளில் மேற்கொண்ட சோதனையில், சாதாரண எலிகளில் ஆத்ரோசெலாரோஸிஸ் ஏற்படுவதில்லை. இம்முறையில் கொழுப்புப் பொருட்கள் இரத்த நாளங்களை கடினப்படுத்துவதுடன் இரத்த ஓட்டம் செல்லும் பாதையை குறுகியதாக்குவதுடன் சீரற்ற இரத்த ஓட்டத்தையும், அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.
இது எவ்வாறு ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய விஞ்ஞானிகள் எலியில் மேற்கொண்ட பரிசோதனையில் விஸ்செரல் கொழுப்பு செலுத்தப்பட்ட இரண்டு எலிகளின் உடலில் உள்ள திசுக்களைச் சுற்றி வீக்கம் உருவாகியிருந்தது, விஸ்செரல் கொழுப்பு செலுத்தப்படாத மற்றொரு எலியின் உடலில் இந்த வகையான வீக்கம் காணப்படவில்லை என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பின்னர் அந்த எலிகளுக்கு பியோகிளிட்டாஜோன் மருந்து உதவியுடன் சிகிச்சை அளித்த போது அதன் உடலில் ஏற்பட்ட வீக்கம் குறைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த பியோகிளிட்டாஜோன், சர்க்கரை வியாதிகளுக்கு அளிக்கப்படும் டி.இசட்.டி மருந்து வகையை சேர்ந்தது என்று இட்ஸ்மேன் கூறியுள்ளார்.
|