கொலஸ்ட்ரால், கொழுப்புத் திரவங்களின் அளவை உடலில் கட்டுப்படுத்த முயற்சி செய்பவர்களுக்கு ஒரு இனிப்பான தகவல். நமது உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும் புதிய மருந்தை உற்பத்தி செய்ய ஏதுவான ஒரு கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இந்த புதிய மருந்து அதிகமான தொப்பையால் உருவாகும் இரண்டாம் வகை சர்க்கரை நோய், இருதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பாரம்பரியமிக்க அல்பர்ட்டா அறக்கட்டளைமருத்துவ ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் மருத்துவர் ரிச்சர்ட் லெக்னர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர்.
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புப் பொருட்கள் உடலியக்க நடைமுறை காரணமாக இரத்தத்தில் சேமிக்கப்படுவதைக் குறைப்பதற்கான வழியைக் கண்டறிந்துள்ளனர். அளவுக்கு அதிகமான கொழுப்பு, சர்க்கரை உணவுப் பண்டங்களையும், உணவுப் பொருட்களை சாப்பிடும் அதேநேரத்தில் மிகக் குறைந்த நேரமே உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் உடலில் கொழுப்பு அதிகமாகி ஊழைச்சதையும், தொப்பையும் ஏற்படுகிறது. இது இருதய, சர்க்கரை நோய்கள் ஏற்பட காரணமாகின்றன.
இது தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சியில் எலி, ஹேம்ஸ்டர் ஆகியவற்றின் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலில் லிப்பிட்ஸின் (கொழுப்புக்களின் கலவை) அடர்த்தியைக் குறைப்பதில் வெற்றிக் கண்டுள்ளனர். இதற்கு ஒரு குறிப்பிட்ட என்சைமின் மூலக்கூறை மருந்து மூலம் சிறிது மாற்றியமைத்துள்ளனர். இதனடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்டேடின்ஸ் என்ற மருந்து நோயாளியின் உடலில் உள்ள எல்.டி.எல். (Low-Density Lipids) அளவைக் குறைக்க உதவும். ஆனால் தொப்பையைக் குறைக்க இது உதவாது.
எல்.டி.எல். , மற்றும் இரத்தத்தில் உள்ள மற்றொரு வகை கொழுப்பான டிரிக்லிசெரைட்ஸ் போன்ற கொழுப்புக் காரணமாக வரும் இருதய, இரண்டாம் வகை சர்க்கரை நோய்களைத் தடுப்பது தொடர்பான கண்டுபிடிப்புத்தான் இந்த ஆய்வு முடிவின் சிறப்பாகும் என்று விஞ்ஞானிளக் தெரிவித்துள்ளனர். இது எவ்வாறு நமது உடலியக்க வழிமுறைகளில் நடைபெறுகிறது என்பதற்கான வழிமுறைகளைத் உருவாக்கியுள்ளோம் என்று ரிச்சர்ட் லெக்னர் தெரிவித்துள்ளார்.
கொழுப்புதிசுக்களிலிருந்து கொழுப்புத் திரவத்தை ஒரு என்ஸைம் நீக்குவதையும், அதனைத் தொடர்ந்து நுரையிரல் இதனை எவ்வாறு தடை செய்கிறது என்பதையும் தாங்கள் கண்டறிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். திசுக்களில் உள்ள டிரிக்லிசெரைட்ஸ், கொழுப்புத் திரவங்கள், கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் உடலியக்க நடைமுறைகளை என்ஸைம்கள் கட்டுப்படுத்தும் விதம் மருந்தியல் உற்பத்தித் துறையில் மிகுந்த ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளதாகவும் ரிச்சர்ட் லெக்னர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வு முடிவுகள் மருத்துவத் துறையில் முக்கியமானது என்றும், அதே நேரத்தில் தொடர்ந்து இந்த முடிவு குறித்து சோதனை மேற்கொள்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து ஒன்றும் மாயக் குண்டு அல்ல என்றும், மக்கள் முறையான உடற்பயிற்சி, உணவை சாப்பிடும் சரியான வாழ்க்கை முறையைத் தேர்வு செய்ய வேண்டும் என்று ரிச்சர்ட் லெக்னர் கூறியுள்ளார்.
|