புகைப்படம், அடையாள அட்டை ஆகியவற்றிற்குப் பதிலாக கருவிழியை கொண்டு ஒருவரின் அடையாளத்தை உறுதிசெய்யும் ஸ்கேன் தொழில் நுட்பத்தை அன்றாட பணிகளுக்கு பயன்படுத்துவதற்கு எதிரான தடையை அகற்றலாம் என்று குயின்ஸ்லாந்த் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தொழில் நுட்பம் பயன்பாட்டுக்கு வரும் போது கதவுகளைத் திறக்க, வங்கி கணக்குகளை மேற்கொள்ள, கணினிகளை பயன்படுத்த என அன்றாட பணிகளுக்கு இத் தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியும்.
நம் கண்ணின் கருவிழியை, கைரேகையைப் போன்று பயன்படுத்துவது தான் இந்த தொழில் நுட்பத்தின் சிறப்பாகும். ஒவ்வொரு கருவிழியும் தனித்தன்மை வாய்ந்தது என்று ஆய்வுக்குழு தலைவர் பேராசிரியர் சம்மிஹாங் கூறியுள்ளார். ஒவ்வொரு தனி மனிதனின் கருவிழியும் தனித் தன்மை வாய்ந்தது என்றும், அதேநேரத்தில் ஒரு மனிதனின் இடது கண்ணின் கருவிழிக்கும், வலது கண்ணின் கருவிழிக்கும் வித்தியாசம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஒரு மனிதனின் வாழ்க்கை முழுவதும் அவனது கருவிழியின் அமைப்பு மாறாது. கருவிழி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு மனிதனை துல்லியமாக அடையாளம் காண முடியும். தற்போது இந்த தொழில்நுட்பம் ஒரு சில இடங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக இது மாறிவிடப் போகிறது என்றும் சம்மிஹாங் கூறினார்.
ஏற்கனவே இந்த முறை நடைமுறையில் இருந்தாலும் அது சரியான முறையில் கடைபிடிக்கப் படவில்லை என்றும், இதற்கு காரணம் ஒளிநிலையில் ஏற்படும் வேறுபாடு மனிதர்களின் கண்மணியின் அளவை மாற்றுவதுடன் கருவிழி அமைப்பையயும் மாற்றி விடுவதாக சம்மிஹாங் கூறியுள்ளார்.
கண்மணியின் அளவு வேறுபடும் போது கருவிழி படலத்தின் அமைப்பும் மாறுவதால், இந்த முறை சிறப்பாக செயல்பட இயலாது என்று கூறினார். இந்த குறைபாடுகளைக் களைவதற்காக பதிலாக ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாகவும், இது கருவிழியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒளி நிலைகளில் ஏற்படும் வேறுபாட்டைத் தொடர்ந்து கருவிழிப்படலத்தில் ஏற்படும் மாற்றத்தின் அளவைக் கணக்கிடவல்லது என்று சம்மிஹாங் கூறினார்.மேலும் கண்மணியின் அளவு ஒளிநிலைக்கு ஏற்ப 0.8 முதல் 8 மி.மி. அளவுக்கு மாறும் என்றும் கூறியுள்ளார்.
ஒரு நிமிடத்திற்கு 1,200 புகைப்படங்களை எடுக்கும் கேமிரா உதவியுடன், ஒளி வேறுபாடால் கண்மணியில் ஏற்படும் மாற்றத்தையும், அதனைத் தொடர்ந்து கருவிழியின் மேற்பரப்பில் உருவாகும் மாற்றத்தையும் கண்டறிய முடியும் என்றும், ஒவ்வொரு மனிதனின் கருவிழி மேற்பரப்பு நகர்வும் வெவ்வேறு விதமாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்ததாக கூறினார்.
இதுவரை நடத்திய கருவிழி புகைப்பட ஆய்வுகளில் இருந்து கணிக்கப்பட்ட கருவிழியின் மேற்பரப்பு மாற்றத்தையும், ஒளி வேறுபாடு காரணமாக மாறியுள்ள கருவிழி மேற்பரப்பு மாற்றத்தின் அளவையும் கணக்கிட இயலும் என்று சம்மிஹாங் கூறியுள்ளார்.
|