ஹெச்.ஐ.வி என்பது தற்போது சர்வதேச அளவில் சமூக, பொருளாதார மற்றும் சுகாதாரத் துறையில் நிலையில் மிகப்பெரிய சவால்களாக அமைந்து காணப்படுகிறது.
உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பால் சராசரியாக எட்டாயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். அதாவது எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளானவர்களில் நிமிடத்திற்கு 5 பேர் உயிரிழக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். எனவே தான் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வுக்கு ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பல்வேறு நாட்டு அரசுகளும் முக்கியத்துவம் அளித்து செயலாற்றிக் கொண்டிருக்கின்றன.
ஹெச்.ஐ.வி. - ஹ்யூமன் இம்யூனோடெபிசின்ஷி வைரஸ் (Human Immunodeficiency Virus) என்பதே இதன் விரிவாக்கம். இந்த வைரஸே எய்ட்ஸ் நோய் ஏற்படுவதற்குக் காரணமாகிறது.
எய்ட்ஸ் - அக்குயர்டு இம்யூன் டெபிசியன்சி சின்ட்ரோம் (Acquired Immune Deficiency Syndrome) எந்த ஒரு நபருக்காவது ஹெச்.ஐ.வி. சோதனை பாசிட்டிவ் ஆக இருக்கும் பட்சத்தில் அவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கொள்ளலாம்.
ஒருவர் ஹெச்.ஐ.வி.யால் தாக்குதலுக்குள்ளானவர் என்பதாலேயே அவருக்கு எய்ட்ஸ் நோய் தாக்குதல் இருப்பதாகக் கொள்ள முடியாது. ஹெச்.ஐ.வி வைரஸானது சம்பந்தப்பட்டவரின் உடலில் மிக அதிக அளவில் தாக்குதலுக்குள்ளாகும் பட்சத்திலேயே அது எய்ட்ஸ் நோயாகிறது. தொற்று தீவிரம் அடைந்து சில நேரங்களில் மரணத்தில் கொண்டு போய் முடிகிறது.
உடலில் உள்ள திரவங்கள் குறிப்பாக இரத்தம், விந்து, கர்ப்பப்பையிலிருந்து வெளியேறும் திரவம் மற்றும் மார்பகப் பால் மூலமாக ஹெச்.ஐ.வி வைரஸ் பரவுகிறது.
கடந்த 2003ம் ஆண்டில் இந்தியாவில் 50 லட்சம் பேருக்கே ஹெச்.ஐ.வி தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 3 கோடியே 80 லட்சம் பேர் ஹெச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
எய்ட்ஸ் தடுப்பு பணியில் அரசு மற்றும் உலகம் முழுவதும் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள். குடும்ப நல மருத்துவர்களின் முயற்சி ஒருபுறம் நடைபெற்று வந்தபோதிலும், ஹெச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் உலக அளவில் பரவுவது அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது என்பதும் கவலையளிக்கக் கூடியது.
ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் பாதிப்பை குறைக்க உரிய முறையிலான பரிசோதனை மற்றும் சிகிச்சை மூலமே முடியும். எய்ட்ஸ் தடுப்பு மாத்திரைகள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் என்று சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டால், வாழ்க்கையே முடிந்து விட்டதைப் போல உணரத் தேவையில்லை. மாத்திரைகள் மூலம் இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். இதனால் வாழ்நாளை அதிகரிக்கச் செய்ய முடியும் என்பதில் சந்தேகம் தேவையில்லை.
|