அலுவலக நேரங்களில், இரவுப் பணிகளில் தொடர்ந்து பணியாற்றுபவர்களுக்கு அவர்களின் உடலில் உள்ள சர்க்காடியன் ரிதம் என்றழைக்கப்படும் உடல் கடிகாரம் பாதிக்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் 10 -க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 44 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ள நியமித்தது. இக்குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இரவுப்பணி, அலுவலக நேரங்களில் அதிகநேரம் கடினமாக பணியாற்றுபவர்களுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து இருப்பது தெரியவந்துள்ளது.
இரவு நேரங்களில் பணியாற்றுபவர்களுக்கு, உடலில் மெலடோனியன் உற்பத்தியை கட்டுப்படுத்தப்படுகிறது. மெலடோனியன் என்ற இந்த வேதிப்பொருள் சர்க்காடியன் ரிதம் என்றழைக்கப்படும் உடல் கடிகாரம் இயங்குதலில் முக்கிய பணியாற்றுகிறது.
இரவு நேரங்களில் பணியாற்றுபவர்களுக்கும், புற்றுநோய் வருவதற்கும் உள்ள தொடர்புக்கு குறைந்த அளவே ஆதாரம் தற்போது கிடைத்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இரவுநேரங்களில் அதிகம் பணியாற்றும் செவிலியர்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பது தெரியவந்துள்ளது.
பொதுவாக மரபணு, சுற்றுச்சூழல் ஆகிய காரணிகளும் புற்றுநோய் ஏற்படக் காரணமாக உள்ளன. இது தொடர்பான ஆராய்ச்சிகள் எல்லாமே கண்காணிப்பு அளவிலேயே உள்ளன. எந்தவிதமான தாக்குதலை அவை உடலில் தொடுக்கும் என்பதும் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்றும் கூறப்படவில்லை.
இரவு நேரங்களில், ஒளியை எதிர்கொள்ளும் விலங்குகளுக்கு அவற்றின் உடல் கடிகாரத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவதையும் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு, சர்க்காடியன் ரிதம் என்றழைக்கப்படும் உடல் கடிகாரம் பாதிப்பு அடைவதற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கான தொடர்புக்கு போதுமான ஆதாரத்தைக் கொண்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
|