மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, தங்களுக்கு கல்வி, மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டும் என்று பெருநகரத் தெருக்களிலும், நடை பாதைகளிலும் வசிக்கும் சிறுவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 9 விழுக்காட்டை தெருவோரக் குழந்தைகளின் கல்வி, மருத்துவ வசதிகளுக்குச் செலவிடுவோம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதி அளித்திருந்தது.
ஆனால், நாளை நாம் குழந்தைகள் தினத்தைக் கொண்டாட உள்ள நிலையில் எல்லா குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளனரா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த தெருவோரக் குழந்தைகள் நல அமைப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்துத் தங்களின் கோரிக்கைகளைத் தெரிவித்தனர்.
மத்திய அரசின் வாக்குறுதியை அடிப்படையாக வைத்து 'nine is mine' என்ற இயக்கத்தை இந்த நல அமைப்பினர் தொடங்கியுள்ளனர்.
அரசியல்வாதிகள் பல்வேறு நேரங்களில் பலதரப்பட்ட வாக்குறுதிகளைத் தருகின்றனர். ஆனால் அவற்றில் ஒன்று கூட நிறைவேறுவது இல்லை. எனவே அவற்றை நினைவுபடுத்தும் வகையில் மாநாடு ஒன்றை நடத்தப்போகிறோம் என்று நல அமைப்பில் உள்ள குழந்தைகள் தெரிவிக்கும்போது வருத்தம் ஏற்பட்டது.
மும்பை வதாலாவில் உள்ள நடைபாதையில் வசிக்கும் சிறுவன் பப்லூ பட்டேல், ''தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவற்றில் மிகச் சிலதான் நிறைவேறியுள்ளன'' என்றான்.
''அரசு நடத்தும் பள்ளிகளில் கல்விக் கட்டணம் உயர்ந்து விட்டது. அடிப்படை வசதிகளும் குறைந்து விட்டன. அதனால் எங்கள் பெற்றோர் எங்களைப் பள்ளிக்குச் செல்ல அனுமதிப்பத்தில்லை'' என்று மற்றொரு சிறுவன் கிரண் காம்ளே கூறினான்.
நாடு முழுவதும் உள்ள 2,00,000-க்கும் அதிகமான பெருநகரத் தெருவோரக் குழந்தைகள் சார்பாக அவர்களின் பிரதிநிதிகள் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தங்களின் கோரிக்கைகளை வைத்தனர்.
அவை நிறைவேறாத நிலையில் குழந்தைகள் தினத்தன்று நாடு முழுவதும் உள்ள 5,00,000-க்கும் மேற்பட்ட பெருநகரத் தெருவோரக் குழந்தைகள் மத்திய அரசிடம் தங்களின் கோரிக்கைகளை வைத்து இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
|