தோலில் சிவப்புத் தடிப்புகளாகப் பரவி மொத்த உடலையும் பாதிக்கும் 'சொரியாசிஸ்' என்ற தோல் நோயை அனைவரும் அறிவோம்.
புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களை இந்த நோய் தாக்கும் வாய்ப்புகள் மிக அதிகம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், போஸ்டனில் உள்ள ஹார்வார்டு மருத்துவப் பள்ளி ஆகியவற்றில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றும் மருத்துவர் ஹையோன் சொய் தலைமையிலான ஆய்வாளர்கள், 'சொரியாசிஸ்' பற்றி ஆய்வு நடத்தினர்.
அதில், புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியவர்களுக்கு 37 விழுக்காடும், தற்போது புகைபிடிப்பவர்களுக்கு 78 விழுக்காடும் 'சொரியாசிஸ்' தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே 'சொரியாசிஸ்' நோயால் பாதிக்கப்பட்டவர்கள் புகை பிடிப்போர் அருகிலிருக்க நேரிட்டு புகையைச் சுவாசித்தால் நோயின் பாதிப்பு மேலும் தீவிரமாகும்.
கருவுற்ற பெண்கள் புகைபிடித்தால் அவர்களின் குழந்தைகளுக்குச் 'சொரியாசிஸ்' தாக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
கடந்த 14 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 79,000 செவிலியர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் சோதனை செய்யப்பட்டனர்.
இதில் 887 செவிலியர்களுக்கு புகைப்பழக்கத்தால் 'சொரியாசிஸ்' வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புகைபிடிக்கும் பழக்கம் அறவே இல்லாத பெண்கள் யாரும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
ஏற்கெனவே ஆய்வு நடத்தியவர்கள் பலரும் புகைபிடித்தலுக்கும் 'சொரியாசிஸ்'-க்கும் உள்ள தொடர்புபற்றி தெரிவித்தனர். ஆனால் அதன் தீவிரத்தை ஆராயத் தவறிவிட்டனர்.
''புகைபிடிக்கும் பழக்கம் நமது உடலில் உள்ள தற்காப்புச் செல்களின் சுழற்சியைப் பாதிக்கிறது. எனவே அப்பழக்கத்தை கைவிடவேண்டியது அவசியம்'' என்று ஆய்வாளர் ஹையோன் சொய் தெரிவித்துள்ளார்.
''சொரியாசிசுக்கும் புகைபிடித்தலுக்கும் இடையில் உள்ள நெருங்கிய தொடர்பை எங்கள் ஆய்வு வெளிக்கொண்டு வந்துள்ளது.
தற்காப்புச் செல்கள் குறைபாட்டினால்தான் சொரியாசிஸ் வருகிறது. எனவே புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களையும் அந்நோய் தாக்கும்'' என்றும் அவர் கூறியுள்ளார்.
|