புகையிலை பழக்கத்தால் திருச்செங்கோடு பகுதியில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் புற்றுநோயால் கடும் பாதிப்பு ஆளாகியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு, தேவனாங் குறிச்சி, பள்ளிபாளையம், வெப்படை, ஆனங்கூர், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் ஏராளமான விசைத் தறிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இந்த தொழிலாளர்கள் `ஷிப்ட்' முறையில் இரவு, பகலாக வேலை செய்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தொழிலாளர்கள் பீடி, சிகரெட், புகை யிலை, குட்கா, குடிப் பழக்கம் ஆகியவற்றுக்கு அடிமையாகியுள்ளதால் தொண்டை, உணவுக் குழாய், இரைப்பை போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.
புற்றுநோயால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள இடம் திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சி பகுதி ஆகும். இங்கு கடந்த 6 மாதங்களில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
தேவனாங்குறிச்சியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி சேகர் (42) என்பவர் தொண்டை புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். அவரது மனைவி செல்வி கூறுகையில், ஒரு வருடமாக எனது கணவர் தொண்டை புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு சிகிச்சை செய்ய எங்களிடம் பணம் இல்லை. அரசும், தொண்டு நிறுவனங்களும் எனது கணவருக்கு சிகிச்சை அளிக்க உதவி செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார்.
|