மனிதன் வரலாற்றை உருவாக்குவதில் மூளையும் உடலும் அதிக உழைப்பை அளித்திருக்கலாம் ஆனால் இவற்றிற்கெல்லாம் அடிப்படை கண்ணே. இதைத்தான் "என் கண்ணே" என்று தலைப்பாக வைத்திருக்கிறார் டாக்டர். கே.ஆனந்த கண்ணன். ஆம். இவர் ஒரு பரந்த அனுபவமிக்க கண் மருத்துவர். இவர் எழுதிய இந்த நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
"ஒன்றைப்பார்த்துதான் மற்றொன்று உருவாகிறது" என்ற பொதுத் தத்துவக் கூற்றுடன் துவங்கும் 85 பக்கங்கள் கொண்ட இந்த சிறிய நூல், அளவில் சிறியதுதான் எனினும், தகவலில் ஆழமுடையது.
பொதுவாக கண் தொடர்பாக எழுதப்படும் நூல்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்த குறிக்கோள்களுக்கு இணங்க எழுதப்படும். இதனால் பிரச்சார நெடி அந்த புத்தகங்களில் தூக்கி அடிக்கும். ஆனால் டாக்டர் கே.ஆனந்த கண்ணனின் இந்த "என் கண்ணே" நூல் கண் பாதுகாப்பை பிரச்சாரத்தின் மூலம் வலியுறுத்தாமல் கண் குறித்த விழிப்புணர்வை தகவலின், விஷயதாரத்தின் ஆழத்துடன் எடுத்துரைக்கிறது.
உதாரணமாக ஒன்றைக் கூற வேண்டுமென்றால் கண்ணில் உள்ள திரவ அமைப்புகளில் ஏற்படும் கோளாறுகளால், இந்த திரவங்களின் அடர்த்தி மாறுபாட்டினால் கண் நோய் பரவலாக ஏற்படுகிறது என்பதை எளிமையாக விளக்கி அதற்கு மருத்துவ சிகிச்சையையும் எல்லோருக்கும் புரியும் விதமாக எழுதியுள்ளார்.
அதேபோல் கண் தானம் மற்றும் கண்களில் செய்யப்படும் பல்வேறு விதமான அறுவை சிகிச்சைகள், லென்ஸ் உபயோகம் மற்றும் ஆடும் கண்களால் ஏற்படும் ஆபத்துகள், கண் புற்று ஆகியவை குறித்து சுருக்கமாக புரியும் படி விளக்கப்பட்டுள்ளது.
கண் பற்றி எளிய முறையில் விஞ்ஞானபூர்வமாக அறிய "என் கண்ணே" நிச்சயம் உதவும் என்று கூறலாம்.
ஆனால் ஒரு குறைபாடும் உண்டு, இந்த துறையில் பரந்து பட்ட அனுபவமுள்ள டாக்டர் ஆனந்தக் கண்ணன் கண்களின் முக்கியத்துவத்தை வைத்து அறுவை சிகிச்சைகளை செய்து எக்கச்சக்கமாக காசு பிடுங்கிவிடும் மருத்துவ முறைகளை சற்றேனும் அடையாளம் காட்டியிருக்கலாம். அப்படிக் காட்டியிருந்தால் எதெற்கெடுத்தாலும் அறுவை சிகிச்சை செய்யும் போக்கையும், மக்களின் பயத்தை பயன்படுத்தி காசு பிடுங்கும் கீழ்த்தரமான வணிகப் போக்கையும் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கலாம். ஆனால் ஆனந்த கண்ணனின் "என் கண்ணே" ஒரு கல்வியாளரின் பார்வையோடு மட்டுமே நின்று விடுகிறது.
|