பிரசவத்தின் போது கணவரும் அவசியம்
|
உலகம் முழுவதும் பிரசவத்தின்போது ஏராளமான பெண்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த பிரசவ கால இறப்பைக் குறைக்க, ஒவ்வொரு பெண்ணின் பிரசவத்தின் போதும் அவளது கணவரும் உடன் இருக்க வேண்டும். இதில் எள்ளளவும் மாற்றுக் கருத்தில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் இயக்குநர் தொராயா அஹமத் ஒபய்த் தெரிவித்துள்ளார்.
பிரசவத்தின் போது கணவரும் உடன் இருந்தால் பிரசவம் சுகமாக நடந்து முடிவது மட்டுமின்றி, பிறக்கும் குழந்தையும் நல்ல உடல் நலத்துடன் இருப்பது நிரூபனமாகியுள்ளது என்று ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை நாளன்று வெளியிட்ட செய்தியில் ஒபய்த் கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் உலக மக்கள் தொகை நாளன்று எடுக்க வேண்டிய முக்கிய தீர்மானம், பிரசவத்தின் போது ஒவ்வொரு கணவரும் உடன் இருக்க வேண்டும் என்பதாகும்.
குடும்பம், அரசியல், செயல்பாடுகள், கொள்கைகள் என எதிலும் ஆண்கள் எடுக்கும் எந்தவிதமான முடிவுகளும் நேரடியாக பெண்களை பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
"தற்போதெல்லாம் கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின் போதும் ஏற்படும் சிக்கல்களினால் ஏராளமான பெண்கள் உயிரிழந்து வருகின்றனர். பிரசவ காலத்தில் மட்டும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு பெண் உயிரிழந்து கொண்டிருக்கிறாள்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், "ஒரு பெண் புதிய உயிரைப் பெற்றெடுக்கும்போது தனது உயிரையேக் கொடுக்க வேண்டியதில்லை. பெண்ணிற்கு தனது வாழ்க்கையை நலத்துடனும், சுயமரியாதையுடனும், சம வாய்ப்புடனும் வாழ அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும்" என்று தனது செய்தியில் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அளித்த செய்தியில், பிரசவத்தின் போது கணவர் இருப்பதால் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற இயலும். கர்ப்பமுறுதல் மற்றும் குழந்தை பிறப்பு மருத்துவ முறைகளில் தற்போது மேம்பாடு அடைந்துள்றோம். வாழ்விற்கும், சாவிற்கும் இடையே வேறுபாட்டை ஏற்படுத்த இயலும். பிரசவத்தின் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனடி மருத்துவ சேவை அளிக்கப்பட வேண்டும்.
இந்த சமயத்தில் கணவர் உடன் இருந்தால் தனது மனைவிக்கும், குழந்தைக்கும் தேவையானவற்றை பாசத்துடனும், அக்கறையுடனும் செய்யும் முக்கிய நபராக இருக்க முடியும் என்று பான் கி மூன் குறிப்பிட்டுள்ளார்.
எல்லா ஆண்களும் பெண்களின் உரிமைக்கு ஆதரவாகவும், கர்ப்ப காலத்தின்போது அவர்களை அனைத்து வழிகளிலும் காக்கும் அரணாகவும் இருக்க வேண்டும். அதுதான் நல்ல உடல்நலன் மிக்க மக்களைக் கொண்ட உலகத்தை உருவாக்கவும், அனைவருக்கும் வாய்ப்பளிக்கவும் வழி வகுக்கும் என்று இந்த உலக மக்கள் தொகை நாளில் நாம் உறுதியேற்ற வேண்டும் என்று கூறினார்.
1987ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதிதான் உலக மக்கள் தொகை 5 பில்லியனை எட்டியது. அந்த நாளைத்தான் 1989ஆம் ஆண்டு முதல் உலக மக்கள் தொகை தினமாக கடைபிடித்து வருகிறோம். அன்றைய தினம் உலக மக்கள் தொகை பெருகுவதையும், அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேரணிகளும், கண்காட்சிகளும், விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்படுகின்றன.
