முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  கட்டுரைகள்
 
லெட்ரோசோல் : அபாயகரமான பயன்பாடு, சட்டவிரோத பரிந்துரை
Webdunia
"லெட்ரோசோல்" என்ற மருந்து மார்பகப் புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் மருந்து. ஆனால் சில இந்திய நிறுவனங்கள் இதை மலட்டுத் தன்மை போக்கும் மருந்தாக மகப்பேறு மருத்துவர்களுக்கு சிபாரிசு செய்து வருகிறது. இது சட்டவிரோதச் செயல் என்பதை விட மிகவும் அபாயகரமான செயல் என்று தான் கூறவேண்டும். இந்த மருந்தை கண்டுபிடித்தவர்களே கருமுட்டைக்கு இதனால் ஏற்படும் ஆபத்து பற்றி எச்சரிக்கை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ருளுகுனுஹ உள்ளிட்ட பல்வேறு மருந்துக் கட்டுப்பாட்டு ஏஜென்சிகளும் இதன் ஆபத்தை ஒப்புக் கொண்டுள்ளன.

இந்தியாவில், ஒரு மருந்து எந்தெந்த நோய் அறிகுறிகளுக்கு எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளரின் (DCGI) சட்ட ஒப்புதல் பெறவேண்டியது ஒரு கட்டாய தேவையாகும்.

ஒரு குறிப்பிட்ட மருந்தை அனுமதி வழங்கப்படாத நோய் அறிகுறிகளுக்கு சிபாரிசு செய்வது சட்டப்படி குற்றமாகும். அம்மாதிரி தவறாக சிபாரிசு செய்யும் மருந்து தயாரிப்பாளர்களுக்கு ஒன்று அல்லது 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவும் சட்டத்தில் இடம் உண்டு. இதற்கு மற்றொரு உதாரணம் மல்டிப்பிள் மைலோமா (Multiple Myeloma) என்ற ஒரு வகை புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் தலிடோமைடு (Thalidomide), உறக்கம் வருவதற்கு பயன்படும் மருந்தாக சிபாரிசு செய்யப்பட முடியாது.

அமெரிக்காவில் வெறும் வலி நிவாரணி என்று கூறி விற்பதற்குப் பதிலாக நாட்பட்ட வலிக்கு என்றுகூறி விற்றதால் மருந்து தயாரிப்பு நிறுவனமான பார்மேசியா பல கோடி டாலர் வழக்கை எதிர்கொண்டு வருகிறது.

மாதவிடாய் நின்றுபோன பிறகு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் உள்ள பெண்களுக்கு மட்டுமே சிபாரிசு செய்யப்படும் கான்சர் எதிர்ப்பு மருந்து லெட்ரோசோல் ஆகும். வேறு எந்த நோய்க்கும் இந்த மருந்தை சிபாரிசு செய்ய உலக அளவில் அனுமதி கிடையாது என்பதே நிலைமை. அனுமதி தரப்படாத அறிகுறிகளுக்கு இம்மருந்தை சிபாரிசு செய்யும் மருத்துவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை கூட மேற்கொள்ளலாம் என்கிறது மருத்துவச்சட்டம்.

லெட்ரோசோல் மருந்தை விலங்குகளில் சோதனை செய்து பார்த்தபோது கருமுட்டையில் நச்சு கலந்து கருவிலேயே உயிரிழத்தல், கரு ஒழுங்கின்மை, மண்டை ஓடு முன்பக்கம் வளர்ச்சி பூர்த்தியடையாமல் இருத்தல், இன்னமும் பல பயங்கரமான விளைவுகள் ஏற்படுவது தெரிய வந்தது. இந்த மருந்தின் பக்க விளைவுகள் மேலும் மோசமானது என்று இதனை கண்டுபிடித்தவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.

கருப்பையில் கட்டிகள், கல்லீரல் புற்று, கருவகத்தில் செல்களின் எண்ணிக்கை அதிகமாதல், இதனால் கருப்பை பெரிதாகுதல், பாலியல் செயல்பாடின்மை மற்றும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பல நோய்களை இந்த லெட்ரோசோல் உருவாக்குகிறது.

ஏனெனில், தவறாக இது பயன்படுத்தப்படும்போது மருந்து உற்பத்தியாளர்கள் தொடர்ந்து தவறாக இதனை சிபாரிசு செய்து வருவதால் அனுமதியின்றி இம்மருந்தை பரிசோதனை செய்கிறேன் என்ற பெயரில் சில மகப்பேறு மருத்துவர்கள் ஆரோக்கியமான பெண்களுக்கு கொடுத்து வருவதும் நம் நாட்டில் நடந்து வருகிறது. இம்மாதிரி மருந்து பரிசோதனைகளுக்கு இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் அனுமதியும், மருத்துவமனை அறவியல் குழு மற்றும் பரிசோதனை செய்யப்படும் நபர்களுக்கு இதனைப் பற்றி தெரிய வந்த பிறகு அவர்களது அனுமதியும் தேவை.

மேலும் இது போன்ற பரிசோதனைகளின் விளைவுகளால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் என்பது அவசியம். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில், அதுவும் போதுமான ஆராய்ச்சி வசதிகள் நிரம்பிய மருத்துவமனைகளில் மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். ஆனால், மகப்பேறு மருத்துவர்கள் "சும்மா" கொடுத்துப் பார்ப்போமே என்று கொடுத்து வருவதும் நடந்து வருகிறது.

சில தனியார் "கிளினிக்குகள்" தங்களை "இன்ஸ்டிட்யூட்" என்றும் அழைத்துக் கொண்டு இத்தவறுகளை செய்கின்றன.

பெண் மலட்டுத்தன்மையை போக்க குளோமிஃபீன் (Clomiphene) உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிபாரிசு செய்யப்படும் மருந்து, அதன் பயன்பாட்டைக் குறைக்க வேண்டுமென்றே லெட்ரோசோலை இதற்கு பயன்படுத்த சில நிறுவனங்கள் அறமற்று, வணிக நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு ஆபத்தான முறையில் சிபாரிசு செய்து வருகின்றன. குளோமிஃபீனைக் காட்டிலும் லெட்ரோசோல் 1000 சதவீதம் செலவு அதிகம் ஏற்படுத்தும் மருந்தாகும்.

மேலை நாடுகளில் பொதுமக்கள் பயனுக்கு அளிக்கப்படும் மருந்து மாத்திரைகளில் அனுமதிக்கப்பட்ட லேபிள், மருந்து குறித்த தகவல் அறிக்கை அதாவது, மருந்துக் கட்டுப்பாட்டாளரின் சீரிய ஆராய்ச்சிக்குப் பிறகு, அனுமதியளிக்கப்படும் மருந்து தகவல் விவரம் இருக்கும். துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் இதற்கான தேவை இல்லாமல் போய்விட்டது. அறமற்ற, அனுமதியற்ற மருந்து சிபாரிசு மீது அரசு கெடுபிடிகளை இறுக்கும் நேரம் வந்துவிட்டது.

செய்யுமா இந்திய அரசு?
மேலும்
முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
எய்ட்ஸ் பாதிப்பா?
கண்ணும் உணவும்
கண்தானம் ஏன் செய்ய வேண்டும்?
எய்ட்ஸ் நோய் பாதித்தோரை அரவணைக்கும் டாக்டர் மனோரமாவும் "செஸ்" அமைப்பும்