பலா இலை இட்லி

வெள்ளி, 30 அக்டோபர் 2009( 11:39 IST )
பலாப் பழத்தில் மட்டும் சத்து நிறைந்திருக்கவில்லை..அதன் இலையும் நல்ல பயன் தரக்கூடியது. இந்த இலையை வைத்து இட்லி செய்யலாம்.
தேவையானவை
பச்சரிசி - 2 கப்
உளுத்தம்பருப்பு - ஒரு கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
பலா மரத்தின் இளம் இலைகள் - சிறிதளவு
செய்முறை:
அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக ஊறவையுங்கள்.
பிறகு, தேங்காய் துருவலுடன் சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்கவிடுங்கள் (6 மணி நேரமாவது இருக்க வேண்டும்).
பலா இலைகளில் நான்கை எடுத்து, முதலில் இரண்டு இலைகளின் அடி பாகத்தை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, சிறு குச்சியால் குத்தி இணைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு, மீண்டும் இரண்டு இலைகளை இதன் மேல் குறுக்காக வைத்து, குச்சியால் குத்தி இணையுங்கள். இந்த நான்கு இலைகளையும் மடக்கி `கப்' போல செய்யுங்கள்.
இப்படியே எல்லா இலைகளையும் செய்துகொள்ளுங்கள்.
இந்த இலை கப்புகளில் மாவை ஊற்றி, இட்லித் தட்டில் வைத்து வேகவைத்தெடுங்கள்.