புளிச்சக் கீரையைத் தான் கோங்குரா என்கிறோம். இது ஆந்திரப்பிரதேச மக்களின் பிடித்தமான உணவு. இதன் சுவை நமக்கும் நிச்சயம் பிடிக்கும். செய்து பாருங்கள்.
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
புளிச்சக் கீரை - 1 கட்டு கடுகு - தேவையான அளவு வெந்தயம் - சிறிதளவு பெருங்காயத்தூள் - சிறிதளவு மிளகாய் வற்றல் - 4 பச்சை மிளகாய் - 3 மஞ்சள்தூள் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் புளிச்ச கீரையின் இலைகளை மட்டும் தனியே எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். சுத்தம் செய்த இலைகளை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் போட்டுத் தாளித்து வதக்கிக் கொள்ளவும். மிக்சியிலோ அல்லது அம்மியிலோ வதக்கிய கோங்குரா இலைகள் மற்றும் வதக்கிய கலவையுடன் சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அறைகுறையாக அரைத்து எடுக்கவும்.
அவ்வளவுதான். புளிப்பு, காரம் கலந்த சுவையான கோங்குரா துவையல் தயார். சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம். துவையலாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
|