இறால் குழம்பு, இறால் வறுவல் அல்லாமல் இறால் தொக்கு செய்து பாருங்கள். சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை தக்காளி - 5 வெங்காயம் - 5 இறால் - 1/4 கிலோ பச்சை மிளகாய் - 4 மிளகாய்த் தூள் - 5 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க உப்பு - தேவையான அளவு செய்யும் முறை தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இறாலை தண்ணீரில் போட்டு தோலை உரித்து சுத்தம் செய்து, அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வையுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். இதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பிறகு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள். கலவை நன்றாக வதங்கியவுடன் வேக வைத்த இறாலைப் போட்டுக் கிளறி இறக்குங்கள். நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி தழைகளை தூவி மூடி வையுங்கள்.
இறால் தொக்கு தயார்.
இரண்டு நாட்களுக்குக் கூட வைத்துக் கொள்ளலாம். தண்ணீர் ஊற்றாததால் கெட்டுப் போகாது.
|