டிவியில் ஆபாச நிகழ்ச்சிகள்-மத்திய அரசு பரிசீலனை
செவ்வாய், 15 செப்டம்பர் 2009( 13:10 IST )
தொலைக்காட்சி அலைவரிசைகளில் நள்ளிரவு நேரத்தில் ஆபாச நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி, தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு என புதிய விதிமுறைகளை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி வகுத்துள்ள 2 யோசனைகள், மிகவும் முக்கியமானவை. குறிப்பிட்ட சேனல்களை, தங்கள் குழந்தைகள் பார்க்கக்கூடாது என்று பெற்றோர் நினைத்தால், அத்தகைய சேனல்களை லாக் செய்யும் வசதி இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
தொலைக்காட்சிகளில், நள்ளிரவு நேரத்தில், வயது வந்தோருக்கான ஆபாச நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதிக்கலாம் என்றும் அவர் கருதுகிறார். இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை, இத்தகைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதி கொடுக்கலாம் என்பது அவரது யோசனை.
பல்வேறு வயதுள்ள நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தில், ஒரே ஒரு தொலைக்காட்சி பெட்டி மட்டுமே இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஆபாச நிகழ்ச்சிகளுக்கு தனியாக நேரம் ஒதுக்குவது, நல்ல விஷயமாக இருக்கும் என்று அம்பிகா சோனி கருதுகிறார்.
வெளிநாடுகளில் பின்பற்றப்படும் இந்த நடைமுறை, இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அம்பிகா சோனி விரும்புகிறார். இவை பற்றி தொலைக்காட்சி சேனல்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கருத்து ஒற்றுமை ஏற்பட சிறிது காலம் ஆகும் என்று அவர்கள் கூறினர்.