ஆக்ரா என்றாலே தாஜ் மஹால்!
காதலிற்கும், கட்டடக் கலைக்கும் அதிசயிக்கத்தக்க அழியாத சான்றாக இருந்துவரும் தாஜ் மஹால் என்ற அற்புதத்திற்கு அருகே, யமுனை நதிக்கரையிலுள்ள மற்றுமொரு பிரம்மாண்ட மானுடப் படைப்பாக திகழ்கிறது லால் கீலா என்றழைக்கப்படும் ஆக்ரா செங்கோட்டை.
தாஜ் மஹாலைப் போல இதுவும் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவில் உறுதியான சுவர்களுடன் திகழும் இக்கோட்டை, ஓராயிரம் ஆண்டுக் கால வரலாற்றுச் சுவடாக விளங்குகிறது.
முகலாயப் பேரரசர் ஷா ஜஹானின் கை வண்ணமே ஆக்ரா கோட்டையை, இந்த நாட்டிலுள்ள மற்ற கோட்டைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
இக்கோட்டையிலுள்ள மூசாம்மன் புர்ஜ், காஸ் மஹால் ஆகிய பகுதிகள் கட்டக் கலைக்கும், சிற்ப வேலைப்பாடுகளுக்கும் அழியாத சான்றாகத் திகழ்கின்றன.
தனது காதல் மனைவி மும்தாஜ் இறந்தபின், அவளின் நினைவாக படைத்த தாஜ் மஹாலை - தனது வாழ்வின் கடைசி காலத்தில் தனது மகனால் இதே கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்தபோது - மூசாம்மன் புர்ஜ் கலைக்கூடத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தார் ஷா ஜஹான் என்று வரலாறு கூறுகிறது.
ஆக்ரா கோட்டைக்குள் ஷா ஜஹான் கட்டிய அழகிய பகுதிகளில் எங்கிருந்து பார்த்தாலும் தாஜ் மஹாலின் உன்னத காட்சியைக் காணலாம்.
தாஜ் மஹாலை நேரில் பார்ப்பதிலும், சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில், ஷா ஜஹான் ஆக்ரா கோட்டையில் இருந்து அதனைப் பார்த்துக் கொண்டிருந்த இடங்களில் இருந்து பார்ப்பதும் வித்தியாசமான அனுபவங்கள்.
ஆக்ரா கோட்டையில் ஷா ஜஹான் உலாவிய இடங்கள் ஒவ்வொன்றையும் படங்களிலும், காட்சிகளிலும் கண்டுவிடலாம், ஆனால் நேரில் பார்ப்பதிலும், ரசிப்பதிலும் கிடைக்கும் அனுபவத்தைப் பெற முடியாது.
அது தாஜ் மஹாலைப் போல, ஆக்ரா கோட்டை எல்லாவிதத்திலும் வித்தியாசமானது.
ஆக்ரா கோட்டை வரலாறு!
தங்கள் ஆட்சியின் தலை நகராக, அதிகார பீடமாக கொண்டிருந்த ராஜ புதன அரசர்கள் 1080ஆம் ஆண்டில் கட்டியது (ஆக்ரா)மண்கோட்டை. 400 ஆண்டுக் காலத்திற்குப் பிறகு, அவர்களைத் தோற்கடித்த சிக்கந்தர் லோடியின் (1487-1517) ஆட்சியின் கீழ் இக்கோட்டை வந்தது.
|