மும்பை, ஐதராபாத்திலிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் எம்.எஸ்.ஜெயந்த் கூறினார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ம் தேதி முதல் அதாவது கார்த்திகை மாதத்தில் மண்டல பூஜைகள் தொடங்குகின்றன. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசித்து செல்வார்கள்.
சென்னை, ஐதராபாத் மற்றும் வடமாநிலங்களில் இருந்து பக்தர்கள், செங்கனூர் ரயில்நிலையத்தில் இறங்கித் தான் சபரிமலை செல்லவேண்டும். எனவே செங்கனூர் ரயில்நிலையத்தில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து ஆய்வு செய்ய தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜெயந்த் நேற்று முன்தினம் வந்தார்.
அங்கு அடிப்படை வசதிகளை அதிகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் பொதுமேலாளர் ஜெயந்த் நிருபர்களிடம் கூறுகையில், மும்பை, ஐதராபாத் பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் கொல்லம் வரை நீட்டிக்கப்படும் என்றார்.