தாம்பரம்-கடற்கரை மார்கத்தில் நவீன மின்சார ரயில்
வியாழன், 17 செப்டம்பர் 2009( 11:56 IST )
மகளிர் ரயில் இயக்கம் துவங்கி ஒரு மாதம் நிறைவடைவதற்குள், தாம்பரம்-சென்னை கடற்கரை ரயில் தடங்களில் மற்றொரு புதிய ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, நவீன வசதிகளுடன் கூடிய மின்சார ரயில் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த மாதம் 1-ந் தேதி தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் எம்.எஸ்.ஜெயந்த் சென்னை எழும்பூர் முதல் தாம்பரம் வரை உள்ள ரயில் நிலையங்களுக்கு சென்று அங்கிருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், ஏராளமான பயணிகள் தங்களின் கருத்துக்களையும் அவரிடம் கூறினர்.
அதன் அடிப்படையில் தெற்கு ரயில்வே சார்பில் நவீன வசதியுடன் கூடிய மின்சார ரயில் (வ.எண் பி-26) தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலில் அடுத்த நிறுத்தத்தை காட்டும் கருவி அமைக்கப்பட்டிருக்கும். ஒரு பெட்டியில் இரண்டு இடத்தில் இந்த கருவி அமைக்கப்பட்டிருக்கும். பயணிகள் பெட்டியில் எந்த பகுதியில் இருந்து கொண்டும் இதை படிக்க ஏதுவாக வகை செய்யப்பட்டிருக்கும்.
ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் சிறிய திரையுடன் கூடிய கருவி இணைக்கப்பட்டிருக்கும் அதில், அடுத்த நிறுத்தத்தின் பெயர் காண்பிக்கப்படும். ரயில் நிறுத்தத்தை சென்றடையும் நேரம் காண்பிக்கப்படும். பயணிகளின் நலன் குறித்த செய்திகள் வரும். பயணிகளின் பாதுகாப்பு குறித்த தகவல்கள் வெளியாகும். ரயிலில் எத்தனை பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதும் காண்பிக்கப்படும்.
மேலும், இந்த ரயில் பெட்டியின் அடியில் இருக்கும் "ஸ்பிரிங்குடன்'' கூடுதல் "ஏர் சஸ்பென்ஷன்'' இணைக்கப்பட்டுள்ளதால் அதிர்வு குறைவதுடன் சொகுசாக பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு மின்சார ரயில் நாளை முதல் ஓடத்தொடங்குகிறது. தாம்பரத்தில் இருந்து நாளை காலை 7.56 மணிக்கு சென்னை கடற்கரையை நோக்கி புறப்படுகிறது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.