சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் சிங்கம், புலிக் குட்டிகளின் எண்ணிக்கை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிகரித்துள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சில மாதங்களுக்கு முன்பு அனு என்ற வெள்ளை புலி 3 குட்டிகள் போட்டது. அதில் ஒன்று இறந்துவிட மற்ற 2 குட்டிகளும் தற்போது ஆரோக்கியமாக உள்ளன.
தற்போது இந்த 2 அரிய வெள்ளைப்புலி குட்டிகள் பொதுமக்கள் பார்வைக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் விடப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வமுடன் வெள்ளைப்புலி குட்டிகளை பார்த்து செல்கிறார்கள்.
இந்த நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பெண் சிங்கம் ஒரு சில மாதங்களுக்கு முன்பு அழகான 3 குட்டிகளை ஈன்றுள்ளது. அவை நலமாக இருப்பதாகவும் இன்னும் சில நாட்களுக்கு அவை பாதுகாப்பாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறகு அவையும் பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும் என்று உயிரியல் பூங்கா காப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், வண்டலூர் வரும் பார்வையாளர்களைக் கவரும், சிங்கம், புலிக் குட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், பூங்கா காப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானைகள் போன்ற பல்வேறு வகையான விலங்குகளும், அரிய வகை பறவைகளும் உள்ளன. இப்பூங்காவிற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இந்த வனவிலங்குகளை கண்டு களிக்கிறார்கள். |