திருமண வரமளிக்கும் கோயில்கள் என்று கருதப்படும் தலங்களுக்கு 3 நாள் சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரம் அளிக்கும் பல்வேறு திருமண திருத்தலங்கள் உள்ளன. முடிச்சூர், திருவிடந்தை, திருமணஞ்சேரி, திருச்சேறை, திருக்கருகாவூர், திருவீழமழலை, நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர், நாச்சியார் கோவில், உப்பிலியப்பன் கோவில், மதுரை, திருவேடகம் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவிலே திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
இந்த திருமணத் திருத்தலங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலா அழைத்துச் செல்கிறது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மேற்சொன்ன கோவில்களுக்கு எல்லாம் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திங்கள்கிழமை காலை சென்னை திரும்பும் வகையில் இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை கும்பகோணத்திலும், சனிக்கிழமை மதுரையிலும் இரவு ஓய்வு எடுக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
இதுபற்றிய கூடுதல் விவரங்கள் அறிய, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகம் மற்றும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் எதிரில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் விற்பனை பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். |