திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 2ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால், பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில்கள் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்து மகா கும்பாபிஷேகம் ஜுலை 2-ந் தேதி வெகு சிறப்பாக நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால், பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே பல சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. முதலில் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில்களில் குறிப்பிட்ட சில ரயில்கள் தற்போது திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்(0655) இன்று (செவ்வாய்கிழமை) மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். பின்னர் இந்த ரெயில் காலை 8 மணிக்கு திருச்செந்தூர் சென்று அடையும் வகையில் அதன் பயணம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வழியாக சென்னை எழும்பூருக்கு ஜுலை 1-ந் தேதி பகல் 12.15 மணிக்கு சிறப்பு ரயில்(0656) புறப்படுகிறது. இந்த ரயில் மதியம் 2 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்து, அங்கிருந்து மதியம் 2.50 மணிக்கு சென்னை எழும்பூருக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு ஜுலை 1-ந் தேதி இரவு 8.25 மணிக்கு சிறப்பு ரயில்(0659) புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். பின்னர் இந்த ரெயில் 9.20-க்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு காலை 10.40 மணிக்கு திருச்செந்தூரை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வழியாக சென்னை எழும்பூருக்கு ஜுலை 2-ந் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு ரயில்(0660) புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது. பின்னர் இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து 9.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
|