கன்னியாகுமரியில் நேற்று கடல் சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலை வளாக தரை தளத்துக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடல் பகுதியில் நேற்று காலை கடல் சீற்றம் கடுமையாக இருந்தது. இதனால் ராட்சத அலைகள் எழும்பின. 10 முதல் 15 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன. ராட்சத அலைகள் பயங்கர சத்தத்துடன் கடல் பாறைகளில் மோதி எழும்பியது.
முக்கடல் சங்கமம் பகுதியில் கடல் அலை மேலே உள்ள கரை வரை தூக்கி வீசியதால் அப்பகுதிக்கு யாரும் செல்லவில்லை. முக்கடல் சங்கமத்தைக் காண வந்த சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் நேற்று கடற்கரைக்கு செல்லாமல் பாதுகாப்பான மேடான இடத்தில் நின்று பார்த்தனர்.
இதே நிலை திருவள்ளுவர் சிலை பகுதியிலும் ஏற்பட்டது. கடல் சீற்றத்தால் அங்குள்ள தரை தளத்தில் கடல்நீர் புகுந்தது. சுனாமி தாக்குதலுக்கு பிறகு நேற்றுதான் ராட்சத அலை தரைதளம் வரை வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் நேற்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் விவேகானந்தர் மண்டபத்துக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து நடைபெற்றது.
கோவளம் கடற்கரையிலும் நேற்று ராட்சத அலைகள் வீசின. இதனால் கடற்கரையோரப் பகுதியில் உள்ள வீடுகள் வரை கடல் அலைகள் வந்து சென்றன. மேலும் ராட்சத அலைகளால் இப்பகுதியில் போடப்பட்டுள்ள தடுப்புச்சுவரின் கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்தது.
இதனால் கன்னியாக்குமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. |