நமது நாட்டிலுள்ள புகழ்மிக்க கோடைச் சுற்றலாத் தலங்களில் ஒன்றான சிம்லாவிற்குச் செல்லும் கல்கா-சிம்லா இரயில் பாதை உலக பாரம்பரியச் சின்னமாக ஐ.நா.வின் யுனெஸ்கோ அறிவித்துள்ளது.தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நீலகிரி மலை இரயில் பாதை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு அதன் பராமரிப்பிற்கு யுனெஸ்கோவின் உதவியையும் தென்னக இரயில்வே பெறுகிறது.மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற டார்ஜிலிங் சுற்றுலாத் தலத்திற்குச் செல்லும் சில்லிகுரி-டார்ஜிலிங் இரயில் பாதையும் உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ ஏற்கனவே அறிவித்ததுள்ளது.இவைகளைத் தொடர்ந்து ஹரியானா, இமாசலப் பிரதேச எல்லையில் உள்ள கல்கா இரயில் நிலையத்திலிருந்து இமாசலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவிற்குச் செல்லும் மலை இரயில் பாதையையும் உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.1905 ஆம் ஆண்டு முதல் இந்த இரயில் பாதை பயன்பாட்டில் உள்ளது. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கோடைக்காலத் தலைநகராக சிம்லா இருந்தது. கல்காவிலிருந்து சிம்லாவி்ற்குச் செல்லும் 96 கி.மீ. இரயில் பாதையில் (இது ஒரு வழிப்பாதை) இன்று பல இரயில்கள் இயக்கப்படுகின்றன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குச் செல்லும் நீலகிரி மலை இரயிலில் செல்லும் போது காணும் இயற்கை அழகு அலாதியானது. ஊட்டி பயணத்தின் ஒரு சுற்றுலா அங்கமாகவே நீலகிரி இரயில் பயணம் இருப்பதை அதில் சென்றவர்கள் உணர்வர். |