சபரிமலை அய்யப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் செய்வதற்கு சென்னை மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் முன்பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
webdunia photo
WD
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரதீபம் ஆகிய இரு விழாக்களில் பங்கேற்பதற்காக, ஆண்டுதோறும் உலகம் முழுவதுமிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் சென்று வருகிறார்கள். ஆண்டு முழுவதும் அய்யப்பனை தரிசித்தாலும், கார்த்திகை மாதம் மாலை அணிந்து ஒரு மண்டலம் கடும் விரதம் இருந்து இருமுடி ஏந்தி அய்யப்பனை தரிசிப்பதை பக்தர்கள் தங்கள் வாழ்நாள் கடமையாக கொண்டுள்ளனர்.
அப்படிப்பட்ட மண்டல பூஜைக்காக சென்னை உள்பட தமிழகத்தில் இருந்து செல்லக்கூடிய அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவது கார்த்திகை மாதப்பிறப்பான செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
இதற்காக, சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில் நிர்வாக அதிகாரி அனீஷ்குமார் கூறுகையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அடுத்தபடியாக கேரளாவுக்கு வெளியே கட்டப்பட்ட முதலாவது அய்யப்பன் கோவில் இதுதான். இங்கு சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பதைப்போன்று அனைத்து பூஜைகளும் நடக்கின்றன.
சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர தீபத்தையொட்டி எண்ணற்ற பக்தர்கள் மாலை அணிந்து இருமுடியுடன் மலைக்கு சென்றுவருகிறார்கள். அவர்களின் வசதிக்காக, சென்னை மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில் தினசரி காலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 11 மணி வரையிலும், மாலையில் 5 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். இந்த நேரத்தில் அய்யப்ப பக்தர்கள் இங்கு வந்து மாலை அணியலாம். அய்யப்பன் படம் பொறித்த தங்கம், வெள்ளி டாலர்கள், துளசி மாலைகள், இருமுடிபைகள், வேட்டி, துண்டுகள் விற்பனைக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் காலை 5.30 மணியில் இருந்து மாலை 7 மணி வரையில் இருமுடிகள் கட்டிக்கொள்ளவும் ஏற்பாடு செய்து உள்ளோம்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் செய்வதற்கான டிக்கெட் இங்கேயே விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், அங்கு தங்குவதற்கான அறைகளுக்கும் இங்கேயே முன்பதிவு செய்யவும் வகை செய்து இருக்கிறோம் என்று அனீஷ்குமார் தெரிவித்தார்.