திண்டுக்கல் நகரில் பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ளது செயிண்ட் ஜோசப் தேவாலயமாகும். இதனைப் பற்றிக் கேள்விப்பட்டதும் நாம் அங்கு சென்றோம்.
webdunia photo
WD
இந்த கோயிலின் வரலாற்றைப் பற்றிக் கேட்டதற்கு, திண்டுக்கல் நகரில் 1866ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பல்வேறு கட்டப் பணிகள் முடிந்து 1872ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டது என்று அறியப்பட்டது.
இந்த தேவாலயம் கட்டுவதற்கு அருட்தந்தை ரப்பாத்தேல் அடிகளாரின் அரிய முயற்சியேக் காரணமாக இருந்தது என்றும் அறிந்து கொண்டோம்.
19ஆம் நூற்றாண்டில் சுமார் 98 சிற்றூர்களுக்கு மையமாக விளங்கும் திண்டுக்கல்லில் எழுப்பப்பட்ட முதல் கத்தோலிக்க தேவாலயம் இதுதானாம்.
இந்த தேவாலயம் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று நம்ப முடியாத அளவிற்கு பொலிவுடன் காணப்பட்டது.
இந்த ஆலயத்தில் 1927ஆம் ஆண்டு அழகிய லூர்து அன்னை கெபி அமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஆலயம் மிகவும் புதுப் பொலிவுடன் காட்சி அளிப்பதற்குக் காரணம், 2000-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்தவர்கள் கூறினர்.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் புனித அந்தோணியார் நவநாள் வழிபாடும், 1960ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் சகாயமாதா நவநாள் வழிபாடும், 1993ஆம் ஆண்டு முதல் வியாழக்கிழமைகளில் குழந்தை இயேசுவின் நவநாள் வழிபாடும் நடைபெற்று வருகின்றன.
நாம் சென்றது ஒரு புதன்கிழமை. அதுவும் நல்லதாகவேப் போனது. ஞாயிற்றுக் கிழமை போல புதன்கிழமையிலும் அங்கு ஏராளமான கூட்டம் காணப்பட்டது. அங்கு வந்தவர்கள், திருமணம், வேலை வாய்ப்பு, கல்வி, குழந்தைப் பேறு போன்று பல்வேறு வேண்டுதல்களுடன் இங்கு வந்ததாகவும், அவை பலவும் இயேசுவின் மூலமாக நிறைவேறப்பட்டன என்றும் கூறுகின்றனர்.
சாதி, மத பேதம் இல்லாமல் அனைத்து சமூக மக்களும் இந்த தேவாலயத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த கோயிலின் சிறப்பு என்றால், 1878ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் வரையப்பட்ட, புனித சூசையப்பரின் மரணம் அன்னை மரியாளின் கரங்களிலும், இயேசுவின் கரங்களிலும் நிகழ்வது போன்ற அற்புத ஓவியம் ஒன்று உள்ளது. அதனைக் காணவே இங்கு வந்தது போன்ற ஓர் உணர்வு நம்மை படர்கிறது.
மேலும், ஆலயத்தின் முன்புறம் இயேசுநாதர் புனித சூசையப்பருடன் சேர்ந்து தச்சுத் தொழில் செய்தல், பால்கார சிறுவனுக்கு ஆரோக்கிய அன்னை காட்சியளித்தல் போன்ற காட்சிகள் தத்ரூபமாக காட்சி அளிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1ஆம் தேதி இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. அப்போது ஏராளமானோர் தேவாலயத்திற்கு வந்து இறைவனை வணங்குகின்றனர்.
ஒரு முறை சென்று வந்த பின், மீண்டும் மீண்டும் நினைவைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் இந்த தேவாலயத்திற்கு நீங்களும் நிச்சயமாக செல்லலாம்.
செல்லலாம் என்று கூறிவிட்டு செல்லும் வழியைக் கூறாமல் சென்றால் எப்படி என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
இதோ, திண்டுக்கல் நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள மணிக்கூண்டு பகுதியில்தான் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்குச் செல்ல திண்டுக்கல் நகரின் எல்லா பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து வசதி உள்ளது.