காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் வரும் 26ம் தேதி மாலை 3.27 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு சனிபகவான் இடம் பெயர்கிறார். சனிப் பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கோயிலில் நடத்தப்படும் பூஜைகளில் பங்கேற்கவும், நளன் குளத்தில் நீராடவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர்.
பக்தர்கள் பாதுகாப்பாக இருக்கவும், திருடர்களை கண்காணிக்கவும் கோயில் வளாகத்தைச் சுற்றிலும் 34 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால், பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்படும். எனவே, பன்றிக்காய்ச்சல் பரிசோதனை மையங்கள், வெயிலை தணிக்க வீதிகளில் கீற்றுப்பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நளன் குளத்தின் கரைகள் சுத்தம் செய்யப்பட்டு நீர் நிரப்பப்பட்டுள்ளது. குளத்தைச்சுற்றி 12, கோயிலை சுற்றி 22 என 34 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் பக்தர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
இதுபற்றி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வசந்த குமார் கூறுகையில், "திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ரூ.50 முதல் ரூ.250 வரை உள்ள கட்டண வரிசை, வி.ஐ.பி மற்றும் தர்ம தரிசன வரிசைகளுக்கு தனித்தனியே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வரும் 25ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் 25ம் தேதி மாலை முதல் 27ம் தேதி மாலை வரை மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. 1,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்று அவர் கூறினார்.