மகாபாரதத்தில் தேரோட்டியாக வந்து அர்ஜூனனுக்கு அறிவுரை சொன்ன கிருஷ்ணரின் அவதாரமான பார்த்தசாரதியின் கோயில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது.
108 திவ்ய தேசங்களில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோயிலும் ஒன்றாகும்.
இந்த கோயிலுக்கு பல பெரும் சிறப்புகள் உள்ளன. பிருந்தாரண்ய ஸ்தலம் என்றும், பஞ்ச வீரத்தலம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்ரேயரால் வணங்கப்பட்ட திருத்தலமாகும்.
இந்த கோயிலில் அமைந்திருக்கும் பார்த்தசாரதியின் திருமுகத்தில் பல தழும்புகள் இருக்கும். அதாவது மகாபாரதப் போரில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்து, போரில் பட்ட விழுப்புண்களின் தழும்புகள் அவை. மேலும் கிருஷ்ண அவதாரங்களில் மீசையுடன் காணப்படும் அவதாரமும் இவர். அர்ஜூனனை பார்த்தா என்று அழைப்பார்கள். தேரோட்டியை சமஸ்கிருதத்தில் சாரதி என்று கூறுவார்கள். எனவே பார்த்தனின் சாரதியாக வந்த இவர் பார்த்தசாரதி என்று அழைக்கப்பட்டார்.
இக்கோயிலில் பார்த்தசாரதிக்கும், நரசிம்மருக்கும் தனித்தனி கொடிமரங்கள் அமைக்கப்பட்டிருக்கும்கோயிலின் அமைப்பு
கோயிலில் அமைந்திருக்கும் மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணன். வலப் புறத்தில் ருக்மணி பிராட்டியாரும், வரதமுத்திரையுடன் கையில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமனும், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோரையும் கொண்டு மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் சேவை சாதிக்கிறார். பெரும்பாலும் பெருமாள் தனது குடும்பத்தாருடன் காட்சி அளிப்பது மிகவும் அரிதாகும்.
சுமதி என்ற தொண்டைமான் மன்னனுக்கு ஏழுமலையான், பார்த்தசாரதியாக அருள் பாலித்த தலம் என்று இந்த கோயிலின் வரலாறு கூறுகிறது.
இவருக்கு அடுத்ததாக பார்த்தசாரதி சன்னதிக்கு வலது புறத்தில் வேதவல்லித் தாயாரின் சந்நதி அமைந்துள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேதவல்லித் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
|