சென்னை நகரின் மிக முக்கியப் பகுதியான பாரிமுனையில் உள்ள தம்புசெட்டித் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயில்.
இந்த கோயில் ஸ்ரீகாளிகாம்பாள் திருக்கோயில் என்று பலராலும் அறியப்படும்.
ஸ்ரீகாளிகாம்பாளை, கர்பக்கிரகத்தின் முன்பு அமர்ந்து நிதானமாக வழிபடும் முறை இங்கு உள்ளது. அதாவது வரிசையில் வரும் பக்தர்களை ஒரு சிறு சிறு குழுவாக பிரித்து கர்பக்கிரகத்தின் முன்பு அமரவைத்து வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இந்த முறை அங்கு வரும் பக்தர்களுக்கு விரும்பத் தக்கதாக இருக்கிறது.
மாதந்தோறும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், பவுர்ணமி நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
நெய் விளக்கு ஏற்றுவது, எலுமிச்சை மாலை அணிவிப்பது போன்றவற்றை பக்தர்கள் செய்கின்றனர்.
கோயில் வரலாறு
சென்னைக் கோட்டையில் கி.பி.1640லேயே இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில்தான் இந்த கோயில் தம்புசெட்டித் தெருவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புராணங்களில் பரதபுரி, சுவர்ணபுரி என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள மூலவச் சிலைக்கு அந்த காலத்தில் செந்தூரம் சாற்றி வழிபட்டதால் சென்னியம்மன் என்ற பெயரும், நெய்தல் நில காமாட்சி என்ற பெயரும் காளிகாம்பாளுக்கு உண்டு.
காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை காமாட்சியே ஸ்ரீகாளிகாம்பாளின் 12 அம்சங்களுள் ஒன்றாகும் என்பது நினைவில் கொள்ளத் தக்கது. அதனை நினைவூட்டும் வகையில் தான் மேற்கு நோக்கி அர்த்தபத்மாசனத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீகாளிகாம்பாள் பாதத்தை நோக்கி அர்த்தமேரு சக்கரம் அமைந்துள்ளது.
|