தஞ்சை பெரிய கோயிலைப் போலவே அமைப்பிலும், வடிவிலும் மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டது இத்திருக்கோயில். 11வது நூற்றாண்டில் - 1030வது ஆண்டில் இக்கோயிலை கட்டிமுடித்தார் இராஜேந்திர சோழர்.
கங்கை கொண்ட சோழபுரமே அடுத்த 250 ஆண்டுகளுக்கு சோழப் பேரரசின் தலைநகராக விளங்கியுள்ளது.
இக்கோயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் இராஜேந்திர சோழர் தனது அரண்மனையைக் கட்டியிருந்தார். சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட அந்த அரண்மனை காலத்தின் ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து நிற்கவில்லை. இன்றைக்கு அவ்விடம் மாளிகை மேடு என்று அழைக்கப்பட்டாலும் மணல் மேடாக, ஒரு வரலாற்று சுவடாகத்தான் திகழ்கிறது. ஆனால், தான் வணங்கும் தெய்வத்திற்காக, கல்லே கிடைக்காத தஞ்சை மண்ணிற்கு பெரும் கற்களை கொண்டுவந்து நிர்மாணித்த கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயில் இராஜேந்திரனது ஆட்சிக்கும், மாட்சிமைக்கும் சான்றாக நின்று கொண்டிருக்கிறது.
தஞ்சை கோயிலில் காணும் பல சிறப்புக்கள் இக்கோயிலில் இல்லையென்றாலும், தெய்வீகத்திற்கும், சிற்ப, கட்டட கலைகளுக்கும் உன்னதமான சான்றாகத் திகழ்கிறது இத்திருக்கோயில்.
சுற்றிச் சுற்றிவந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று எண்ணவைக்கும் இக்கலைப் பொக்கிஷத்தை அடையாளம் கண்டு அழிவிலிருந்து காப்பாற்றி உலகத்தின் பார்வைக்கு கொண்டு சென்ற தொல்லியல் துறை மிகுந்த பாராட்டிற்குறியது.
இவ்விடத்திற்குச் செல்ல...
சென்னையிலிருந்து 250 கி.மீ. தூரத்தில், கும்பகோணம் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் குறுக்கிடும் ஜெயங்கொண்டம் கூட்டுச் சாலையில் இறங்கி, அங்கிருந்து மேற்காக 4 கி.மீ. தூரம் சென்றால் கங்கை கொண்ட சோழபுரத்தை அடையலாம்.
தங்குமிடம் : கும்பகோணத்தில் தங்கிக்கொண்டு ஒரு மணி நேர பயணத்தில் இவ்விடத்திற்கு வரலாம்.
கங்கை கொண்ட சோழபுரம் - புகைப்படத் தொகுப்பு!
|