இயற்கை தனது பேரழகை கொட்டிக் கொடுத்துள்ள ஒரு மலைப்பாங்கான இடத்திற்கோ அல்லது மனத்தை கொள்ளை கொள்ளும் அழுகுடன் திகழும் ஆறும், அருவிகளும் தவழும் இடத்திற்கொ ஆண்டிற்கு ஒரு முறை சென்று தங்கி இளைப்பாறும் சுகத்தை பெறுவதே சுற்றுலா பயணத்தின் இனிய அனுபவமாகும்.
இப்படி திட்டமிட்டு சுற்றுலா செல்வதல்லாமல், ஏதாவது ஒரு பணி நிமித்தமோ அல்லது மற்றபடியோ நாம் எங்காவது பயணம் செல்லும்போது - பேருந்திலோ அல்லது ரயில் பயணத்திலோ திடீரென்று நமது கண்ணையும், கருத்தையும் ஒரே சேரக் கவரும் இயற்கைக் காட்சிகள் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன. அப்படியொரு காட்சியை சென்னையிலிருந்து திருப்பதி செல்பவர்கள் அடிக்கடி பார்த்திருப்பார்கள்.
திருத்தணியைத் தாண்டி ஆந்திர மாநில எல்லைக்குள் நுழைந்ததும், நகரி பகுதியைக் கடக்கும் போது ஆங்காங்கு சில மலைகளைப் பார்ப்போம். தனித்து, தாவரங்கள் ஏதுமற்று, உதிர்ந்த பாறைகள் அடிவாரத்தில் குவியலாய் கிடக்க, ஒரு கல்லாய் உயர்ந்து நிற்கின்றன இந்த மலைகள்.
இவைகளின் உச்சிப்பகுதி மழ மழப்பாக, ஏதோ தேய்த்து தேய்த்து மழுப்பியதுபோல காணப்படும். இப்படிப்பட்ட மலைகள் நமது நாட்டின் கிழக்கு மலைத் தொடர்களோடு சேர்ந்ததவை. காலத்தால் இவைகளை மிக மூத்தவை என்று கூறுகிறது பூகோளவியல்.
|