ஒவ்வொரு இனத்துக்கும் தங்களது வரலாற்றுப் பெருமிதங்களின் மீது பெருமையுண்டு. மலையாளிகளின் வரலாற்றுப் பெருமிதம், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய பழசிராஜா. எம்.டி.வாசுதேவனின் திரைக்கதையில் ஹரிஹரன் அதனை படமாக்கியிருக்கிறார்.
WD
வியாபாரத்துக்கு வரும் வெள்ளையர்கள் தங்களது படை பலத்தாலும், பிரித்தாளும் சூழ்ச்சியாலும் கேரள குறுநில மன்னர்களை தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு அடிபணிய மறுக்கிறார் பழசிராஜா. கோபமுறும் ஆங்கிலேயர்கள் சில புல்லுருவிகளின் துணையுடன் பழசிராஜா இல்லாத வேளையில் அவரது அரண்மனையை கொள்ளையடிக்கிறார்கள். அரண்மனை ஆங்கிலேயன் வசமாகிறது.
பழங்குடியினரை திரட்டும் பழசிராஜா ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுக்கிறார். அவரது கள்ளப் போருக்கு (கொரில்லா போர்) தாக்குப் பிடிக்க முடியாத ஆங்கிலேயர்கள் பழசிராஜாவை சமரசத்துக்கு அழைக்கிறார்கள். சக மன்னர்களின் வற்புறுத்துதலால் சமரசத்துக்கு பழசிராஜா சம்மதிக்கிறார். இருவருக்குமிடையில் ஒப்பந்தம் போடப்படுகிறது.
ஆங்கிலேயர்கள் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிக்கிறார்கள். பழசிராஜா மீண்டும் படை திரட்டி போர் புரிகிறார். பதவி ஆசை கொண்ட சில மண்ணின் மைந்தர்களின் உதவியுடன் பழசிராஜாவை எதிர்க்கிறது ஆங்கிலப்படை. பழசியின் தளபதிகள் ஒவ்வொருவராக மடிகிறார்கள். இறுதி சண்டைக்கு ஆயத்தமாகிறார் பழசிராஜா. ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம் என்கிறார்கள் நலம் விரும்பிகள். பழசிராஜா அதனை நிராகரித்து போருக்குப் புறப்படுகிறார். ரத்த வெள்ளத்தில் ஒரு வீர சகாப்தம் முடிவுக்கு வருகிறது.
பழசிராஜாவாக மம்முட்டி நடித்திருக்கிறார். ஆவேசமாக வசனம் பேசாமல் நடைமுறையை புரிந்து போர் செய்யும் அண்டர்ப்ளே கேரக்டர். பழங்குடி வீரன் மனோஜ் கே.ஜெயனின் சாவுக்கு பழி தீர்க்க தனியாளாக போர் செய்யும் இடம் ஹீரோயிசம் கலந்த கோபரசம். மனைவியிடம், ஆயுதங்களை நேசித்த அளவுக்கு உன்னை நேசிக்க மறந்து விட்டேன் என்று கூறும்போது கலங்க வைக்கிறார்.
பழசிராஜாவின் வீரமிக்க படைத் தளபதியாக சரத்குமார். விசுவாசமிக்க ஊழியனாக பதவியை துறக்கும் இடத்திலும், துரோகி சுமனை பழி தீர்க்கும் இடத்திலும் சபாஷ். தூக்கில் தொங்க மாட்டேன் என்று தனது முடிவை தானே தேடிக் கொள்ளும் இடம், பரிதாபம்.