தமிழில் வெளிவந்திருக்கும் குறிப்பிடத்தகுந்த (முதல்?) அட்வென்சர் மூவி... சாகசப் படம், பேராண்மை. இயற்கையில் கடலையும், ஈ-யில் நகரம் சார்ந்த விளிம்பு நிலை மனிதர்களின் வசிப்பிடங்களையும் காட்சிப்படுத்திய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், பேராண்மையில் காடும் காடு சார்ந்த பகுதிகளையும் கதைக்களமாக்கியிருக்கிறார்.
WD
பழங்குடி இனத்தைச் சேர்ந்த வனக்காவலர் துருவன், என்சிசி பயிற்சிக்கு வரும் ஐந்து மாணவிகளின் துணையுடன், இந்தியாவின் செயற்கைகோளை தகர்க்க முயற்சிக்கும் அந்நிய நாட்டு கூலிப்படையை அழித்து, செயற்கைகோளை காப்பாற்றுகிறார்.
பங்குடி இனத்தைச் சேர்ந்த வனக்காவலராக ஜெயம் ரவி நடித்திருக்கிறார். சாதி வெறி பிடித்த மேலதிகாரி (பொன்வண்ணன்) அவமானப்படுத்தும் போதும், விடலை மாணவிகள் வேண்டுமென்றே பழி சுமத்தும் போதும் பொங்கியெழாமல் பொறுமை காப்பது, துருவன் கதாபாத்திரத்தின் பேராண்மை.
தனது கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி உடம்பை இரும்பாக்கியிருக்கிறார் ஜெயம் ரவி. சிக்ஸ்பேக் ஹீரோக்கள் டூயட் பாடலில் சட்டை கழற்றும்போது, எருதுக்கு பிரசவம் பார்க்கும் காட்சிக்காக கோவணம் கட்டியிருக்கிறார். நல்ல கதை வைத்திருக்கும் இயக்குனர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.
படத்தின் ஒளிப்பதிவு தனியே பேசப்பட வேண்டிய ஒன்று. காடு எனும் இயற்கையின் வனப்பை கண்ணுக்கு விருந்தாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதீஷ்குமார். அட்வென்சர் படம் என்றாலும், ராம்பிங்ஷாட் என்று கேமராவை கண்டபடி ஆட்டாததற்கே அவருக்கு விருதளிக்கலாம்.
வித்தியாசமான கதைக்களம், காடு பற்றிய ஆச்சரியமான விளக்கங்கள், நவீன ஆயுதங்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை படத்தில் ஆச்சரியத்துக்குரிய அம்சங்கள்.
பயிற்சிக்கு வரும் கல்லூரி மாணவிகளில் ஒரு குரூப் மட்டும் அடாவடியாக இருப்பதும், இந்தியாவுக்கு ஆபத்து என்றதும் அதே குரூப் ஜே போட்டு அட்டென்சனுக்கு வருவதும் வழக்கமான கமர்ஷியல் கந்தல். நவீன ஆயுதங்களுக்கு நடுவில் ஜீவ மரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போதும், வாத்தியார் மாதிரி ஜெயம் ரவி ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கிக் கொண்டிருப்பது படத்தின் டெம்போவை கீழிறக்கிறது. இந்த கீதாஉபதேசம், நடப்பது நிஜப் போராட்டமா இல்லை டெமான்ஸ்ட்ரேஷனா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
நவீன ஆயுதங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்கும் இயக்குனர் அதை எப்படி கையாள்வது என்பதிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். எந்திர துப்பாக்கியை ஏதோ எரவாணத்தில் இருக்கும் துடைப்பத்தை எடுப்பதுபோல் ஒரு கையால் தூக்குகிறார்கள். அர்னால்டே முக்கி முனகி கையாளும் ஸ்டிரிங்கர் ஏவுகணையை இவர்கள் பயன்படுத்தியிருக்கும் விதம் அக்மார்க் சின்னப்புள்ளத்தனம். வித்யாசாகரின் இசையும் பாடல்களும் படத்தின் மிகப் பெரிய ஏமாற்றம். என்னாச்சு சார்?
WD
வனக்காவலர் ஜெயம் ரவிக்கு நவீன ஆயுதங்கள் பற்றி தெரிந்திருப்பதை ஜீரணித்துக் கொள்ளலாம். ஆனால் என்சிசி பெண்கள் ஏவுகணையை திசைமாற்றுவதெல்லாம் டூ மச். வில்லன் ரோலண்ட் கிக்கிங்கரின் உடம்பு மிரட்டல் என்றால் கேரக்டர் சொதப்பல். வெளிநாட்டு கூலிப்படையை இப்படி ஜஸ்ட் லைக் தட் சாய்க்க முடியுமென்றால் பாகிஸ்தானுக்கே இந்ரேம் இனிமா கொடுத்திருப்போமே.
சாதி வெறி அதிகாரியின் பேச்சை பல இடங்களில் மியூட் செய்திருக்கிறது சென்சார். இரட்டை அர்த்த காமெடியை அனுமதிப்பவர்கள் இதுபோன்ற சென்சிடிவ் பிரச்சனையை மூடி மறைப்பது, ஒருவகையில் சாதி வெறிக்கு துணைபோவதே அன்றி வேறில்லை.
காட்டின் மைந்தர்களான பழங்குடியினரின் மீது கட்டவிழ்த்து விடப்படும் அரசின் அதிகார வன்முறை, உலக அரசியலை படியுங்கள் என்ற அறிவுரை, நோகாமல் நொங்கெடுக்கும் அதிகாரிக்கு மெடல் என பல விஷயங்களை தொட்டுச் செல்கிறது படம். காதலுக்கு பின்னால் அலையும் இயக்குனர்கள் இதையும் கவனத்தில் கொள்ளலாம்.
காதல், ஓபனிங் பாடல், தனி ட்ராக் காமெடி, பன்ச் டயலாக் என தமிழ் சினிமாவின் ஃபார்முலா வியாதிக்கு உட்படாத எந்தப் படத்தையும் ஆராத்தி தட்டுடன் வரவேற்கும் அறிய சூழலில் இருக்கிறது தமிழ் சினிமா. அந்தவகையில் இந்த சாகசப் படத்தை ராயல் சல்யூட் அடித்து கொண்டாடலாம்.