கமல் பத்து வேடங்களில் நடித்திருக்கும் தசாவதாரம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் தொடங்கி இருபத்தியோராம் நூற்றாண்டில் முடியும் மெகா மாரத்தான். இந்தக் காட்டாற்று வெள்ளத்தில் ஒருவர் உணர்ச்சிகரமான கதையையோ, ஊடுருவித் துளைக்கும் காட்சியையோ எதிர்பார்த்தால் ஏமாற்றமே. ஆற்றில் குதித்தபின் அதன் போக்கில் நீந்துவதுதானே புத்திசாலித்தனம்!
சைவ, வைணவ சண்டையுடன் தொடங்குகிறது தசாவதாரம். சண்டை என்று வந்தபின் செக்கேது... சிலையேது. சிவனை வணங்க மறுக்கும் ராமானுஜ நம்பியை கோவிந்த ராஜ பெருமாள் சிலையுடன் பிணைத்து கடலில் வீசுகிறான் சைவனான குலோத்துங்க சோழன். சோழனால் சமுத்திரத்தில் மூழ்கிய கதை மீண்டெழுவது இருபத்தியோராவது நூற்றாண்டில்.
அமெரிக்காவில் விஞ்ஞானியாக இருக்கும் கோவிந்தன் வைரஸ் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். பரவினால் தரணியே நாசமாகும் அந்த வைரசை தீவிரவாதிக்கு விலை பேசுகிறார் கோவிந்தனின் உயரதிகாரி. எதிரி கைக்கு வைரஸ் சென்றுவிடக் கூடாது என்பதால் வைரசைக் கடத்துகிறார் கோவிந்தன். முன்னாள் சிஐஏ ஏஜெண்டான வெள்ளை அமெரிக்கன் பிளெட்சர் வில்லன். கோவிந்தன் ஓட பிளேட்சர் துரத்த மீதி ரீல் முழுவதும் ஜாலியோ ஜிம்கானா!
நிமிடங்களே நீடிக்கும் ஆரம்பக் காட்சியில் நம்பியாக வரும் கமலின் நடிப்பும், தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும், சோழர் கால அரங்க அமைப்பும், ரேஷமையாவின் கல்லை கண்டால் பாடலும் மாயம் புரிகின்றன. மறக்க நெடுநாள் ஆகும் காட்சியமைப்பு.
கோவிந்தனின் ஓட்டம் அமெரிக்காவில் துவங்கி இந்தியா வந்து சிதம்பரம் வழியாகச் சென்னை சுனாமி பேரலைகளுடன் நிறைவடைகிறது. இந்த நெடும் பயணத்தில் ரா உளவுத்துறை அதிகாரி பல்ராம் நாயுடு, தலித் தலைவர் வின்சென்ட் பூவராகவன், கிருஷ்ணவேணி பாட்டி, ஏழடி உயர கலிபுல்லா கான், ஜப்பான் தற்காப்புக் கலை நிபுணர், பஞ்சாப் பாடகர் அவதார் சிங், ஜார்ஜ் புஷ் எனப் பலவேசம் காட்டுகிறார் கமல்.
சுந்தர தெலுங்கும் கொஞ்சும் தமிழும் கலந்து பல்ராம் நாயுடு உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் நகைச்சுவை சரவெடி. மேனரிசம், தோற்றம், குரல் என அத்தனையிலும் நாயுடுவாகவே மாறியிருக்கிறார் கமல்.
கமலா என்று ஆச்சரியப்படுத்துகிறார் வின்சென்ட் பூவராகவன். கறுப்பு உடம்பில் இருந்து வெளிப்படும் சிவப்புச் சிந்தனைகள் பளீர். எதிரியின் குழந்தைகளைக் காப்பாற்றப்போய் சுனாமியில் உயிர்விடும் பூவராகவனின் முடிவு கண்ணீர்த்துளி.
வெள்ளைக்கார வில்லன் பிளெட்சர் (இதுவும் கமல்தான்) வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு. இலக்கைத் தவிர எதையும் மதிக்காத முரட்டுத்தனம். சின்னக் கத்தியும் சேவலின் சிலிர்ப்புமாக
|