படுக்கையை பகிர்ந்த மறு நிமிடமே, யாரோ முகம் தெரியாதவன் போனில் சொன்னதை கேட்டு, ஆளில்லாத கடற்கரையில் திவ்யாவை ஷாம் நள்ளிரவில் தவிக்க விட்டுச் செல்வதை நம்ப முடியவில்லை. ஷாம் கதாபாத்திரம் அத்தனை முட்டாளா?
தன்னை மாடலாக்கிய ஆள்தான் தனது காதலுக்கு வில்லன் என்பதை சரியாக கிளைமாக்ஸில் திவ்யா தெரிந்து கொள்வதும், மன்னிப்பு கேட்பது போல் கெஞ்சி, திடீரென்று இப்படியெல்லாம் பேசுவேன்னு பார்த்தியா என குரல் உயர்த்துவதும் அனேகமாக எல்லா தமிழ் சினிமாக்களிலும் பார்த்துப் புரையேறிய காட்சிகள்.
கவியரசுவின் கேமராவை ரசிக்க முடியாமல் செய்திருக்கிறது எடிட்டிங். ஷாம் திவ்யாவை பிரிவும் அந்தக் கடற்கரை காட்சியில், கடலும் அதன் பின்னணியில் தெரியும் நிலவும், நட்சத்திரங்களும்... காட்சித் கவிதை!
காதல், கோபம், சோகம் என்று கதாபாத்திரங்கள் எந்தெந்த உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்களோ, அதற்கு முன்பே இசையமைப்பாளரின் வாத்தியங்கள் அந்தந்த உணர்வுகளுக்கான இசையை வாசிக்கத் தொடங்கி விடுகின்றன. இதனால் படம் பார்த்து கதை சொல்லும் பள்ளி மாணவர்களின் ரசனைக்கு தள்ளப்படுகிறோம். பாடல்கள் டப்பிங் பட வாசனையுடன் கேன்டீன் பக்கம் ஓட வைக்கின்றன.
மருத்துவராக வரும் ரேவதிக்கும், அந்த நீள முடி வில்லனுக்கும் அதிக வேலையில்லை. விவேக்கின் அப்பீட்டு ரிப்பீட்டு சவடால்களால் காது செவிடாகிறது. Noise Pollution! சினிமா கதாபாத்திரங்களை இமிடேட் செய்யும் இம்சையை என்றுதான் விடப்போகிறாரோ!
இயல்பாகவும், அழுத்தமாகவும் படத்துடன் பொருந்திப் போகும் வசனங்களுக்காகவும், தாய்மையின் வலியை சந்தியாவின் வழியாக சிறப்பாக வெளிப்படுத்தியதற்காகவும் அதியமானை பாராட்டலாம்.
இளமையின் கொந்தளிப்பை விட தாய்மையின் தத்தளிப்பே தூண்டிலை ஓரளவேனும் காப்பாற்றுகிறது.
|