ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ்கண்ணா தயாரித்திருக்கும் படம், சா.. பூ.. திரி. அர்ஷத்கான் படத்தை இயக்கியிருப்பதுடன் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.
WD
குழந்தைகளுக்கான விளையாட்டை நினைவுபடுத்தும் பெயர் என்றாலும் இது பெரியவர்களின் காதல் விளையாட்டை பற்றிய படம். சாத்தியமான காதல், பூர்த்தியான காதல், திரில்லான காதல்... இதன் சுருக்கம்தான் சா.. பூ.. திரி.
அர்ஷத்கானுடன் சின்னத்திரை நடிகர் பிரஜன், அக்சய் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தில் ஐந்து ஹீரோயின்கள். மிதுனா, சாரா, அக்சா, உஜ்ஜயினி, பிங்கி. இதில் மிதுனாவை தவிர மற்றவர்கள் புதுமுகங்கள்.
பதினெட்டு, இருபத்தைந்து மற்றும் முப்பது வயதுக்காரர்களின் காதல்தான் படத்தின் கதை. பதினெட்டு வயது இளைஞன் தன்னைவிட பன்னிரெண்டு வயது மூத்த பெண்ணை காதலிக்கிறான். அவள் பின்னாலேயே அலைகிறான். அதேநேரம் அவனுடன் படிக்கும் இளம் பெண் அவனை காதலிக்கிறாள். இதுவொரு ட்ராக்.
இருபத்தைந்து வயது இளைஞன் காதல் உணர்வே இல்லாத பெண் பின்னால் சுற்றுகிறான். பிறகு தனது தவறை உணர்ந்து வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறான். இது இன்னொரு ட்ராக்.
முப்பது வயது ஐடி துறை இளைஞன் காதலித்து திருமணம் செய்து கொண்டவளை வேலைப் பளு காரணமாக கவனிக்காமல் விடுகிறான். மண வாழ்க்கையில் இதனால் வில்லங்கம் ஏற்படுகிறது. இது மூன்றாவது ட்ராக்.
இந்த மூன்று காதல் கதையில் திருமணமான பெண்ணை காதலிக்கும் எபிசோட் மிக ஆபாசமாக இருப்பதாகக் கூறி படத்துக்கு சென்சார் ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது.
அப்பாஸ் ரஃபி இசையமைத்திருக்கிறார். சஞ்சய் ஒளிப்பதிவு. எல்.கே.வி.தாஸ் எடிட்டிங். வரும் வெள்ளிக்கிழமை படம் திரைக்கு வருகிறது.