“You offended my family and offended the shaolin temple” என்று வில்லனை நோக்கி நிலைகுத்திய கூர்பார்வையுடன் கூறிவிட்டு, அவனோடு மோதுவதற்கு தயாராக, தனக்கே உரித்தான சண்டைத் துவக்க பாணியில் புரூஸ் லீ காலை விரித்துவைத்து, தனது கைகளை உயர்த்தியதும் திரையரங்குகிளில் விசில் சத்தம் காதைப் பிளந்தது.
எண்டர் த டிராகன் படத்தின் இறுதிக் காட்சியில் வில்லனைத் துரத்திக்கொண்டு புரூஸ் லீ துரத்திச் செல்ல, அவன் தனக்குப் பாதுகாப்பான கண்ணாடி அறைக்குள் புகுந்துவிட, மிக எச்சரிக்கையாக அவனை கண்டுபிடித்ததும், நேருக்கு நேர் பார்த்து இவ்வாறு கூறிவிட்டு அவர் செய்த சண்டைக் காட்சியை பார்த்த எந்த ரசிகனும் மறந்திருக்க முடியாது.
சென்னை ஆனந்த திரையரங்கில் எண்டர் த டிராகன் படம் வெளியிடப்பட்டபோது புரூஸ் லீ உயிரோடு இல்லை. 1976ஆம் ஆண்டில் இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்டது. ஆனால் புரூஸ் லீ 1973ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார் என்ற உண்மை அப்போது எந்த ரசிகருக்கும் தெரியாது.
ஓடு ஓடு என்று ஓடியது எண்டர் த டிராகன். முதல் தடவை திரையிடப்பட்டு 25 வாரங்கள் ஓடியதை விடுங்கள். மீண்டும் திரையிடப்பட்டபோது 100 நாட்கள் ஓடியது. இந்தியாவில் இந்தப்படம் வசூலைக் குவிக்காத நகரமே இல்லை என்றானது.
ஒரு சாதாரணக் கதைதான் (ஒரு விதத்தில் பழி வாங்கும் கதையும் கூட) எண்டர் த டிராகன். ஹாங்காங்கிற்கு அருகில் உள்ள ஹான்ஸ் தீவை சொந்தமாக வைத்துக்கொண்டு போதைப்பொருள் தயாரித்து அதனை உலகளாவிய அளவில் கடத்தி விற்றுவந்தவனை ஆதாரப்பூர்வமாக பிடிக்க முயன்ற ஹாங்காங் காவல்துறை பல உளவாளிகளை அனுப்புகிறது. அவர்களில் பலர் பெண்கள். ஓரளவிற்கு உண்மை தெரிகிறது. உண்மையை அறிந்து வெளியே செல்ல முயன்றவர்கள் கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் - தற்காப்புக் கலையில் கைதேர்ந்த - அவனை முடிக்க தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கும் வீரனை தேர்ந்தெடுத்து அனுப்புகிறது ஹாங்காங் காவல் துறை. அவர்தான் புரூஸ் லீ.
ஹான்ஸ் தீவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தற்காப்பு கலைப் போட்டியில் பங்கேற்க புரூஸ் லீ அனுப்பப்படுகிறார். உலக அளவில் சிறந்த விளங்கிய கராத்தே, பாக்சிங் உள்ளிட்ட பல கலைகளில் சிறந்த வீரர்களும் கலந்துகொள்ள வருகின்றனர்.
போட்டியின் முதல் சுற்றிலேயே, தனது தங்கையை கற்பழித்துக் கொன்றவனும், வில்லனின் மெய்க்காப்பாளனுமாகிய கராத்தே வீரனை (பாப் வால்) தோற்கடிக்கிறார் (கண்ணிமைக்கும் நேரத்தில் குத்துகள் விழுகின்றன) புரூஸ் லீ. தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத அவன் புரூஸ் லீயைக் கொல்ல பாட்டில்களை உடைத்துக்கொண்டு குத்துவதற்குப் பாய, அவனுடைய கழுத்தில் வெட்டு உதை கொடுத்து கொன்றுவிடுகிறார் புரூஸ் லீ. அவனைக் கொன்ற நிலையில், குரூர முகத்துடன் வில்லனை ஒரு பார்வையும் பார்த்துவிட்டுச் செல்வார். இந்தக் காட்சி திரையில் ஓடும்போது திரையரங்கில் மயான அமைதி நிலவியது.
|