தாய் தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் இந்த நவீன யுகத்தில், சிறுவர்களின் உலகில் பெற்றோர்களின் இடம் காலியாகவே உள்ளது. பரிசுகள் கொண்டோ, தண்டனைகளாலோ அந்த இடத்தை நிறைத்துவிட பெற்றோர்கள் முயல்கின்றனர். புறக்கணிப்பின் ஒரு பகுதியான பரிசுகளும், தண்டனைகளும் அந்த வெற்றிடத்தை மேலும் அதிகமாக்குவதை பெற்றோர்கள் உணர்வதில்லை.
இந்த எளிய உண்மையை அதைவிட எளிய வடிவில் திரையில் கொண்டுவந்தவர், பிரெஞ்ச் புதிய அலை சினிமா இயக்குனர்களில் ஒருவரான பிரான்கோஸ் த்ரூபோ (Francois Truffaut). படத்தின் பெயர் '400 Blows'.
1959ல் வெளியான இத்திரைப்படம் த்ரூபோவின் வாழ்க்கையை பிரதிபலித்தது எனலாம். 1932 ஆம் வருடம் பாரீசில் பிறந்தவர் த்ரூபோ. இவரது அம்மாவின் இரண்டாவது கணவர் இவரை ஏற்றுக்கொண்டாலும், பாட்டி வீட்டிலேயே வளர்ந்தார்.
நானூறு உதைகள் திரைப்படத்தில் வரும் சிறுவன் அந்த்யோனுக்கும் தகப்பன் இல்லை. தாய் மற்றும் தாயின் இரண்டாவது கணவருடன் வாழ்கிறான். அந்த்யோனின் தாய் நேரம் கழித்து வரும்போது அவனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு, தாயின் இரண்டாவது கணவன் மீது விழுகிறது. இதனை முன்னிட்டு தனது மனைவியுடன் சண்டையிடுகிறான் அந்த கணவன்.
அந்த்யோவின் வீடு இப்படியென்றால், பள்ளிக்கூடமோ, தண்டனைகள் மட்டும் அளிக்கும் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான அமைப்பு. இந்த இரு பெரும் துயரங்களுக்கு நடுவில் திசைமாறுகறிது அந்த்யோனின் வாழ்க்கை.
உலகம் ஒரு அலுவலகமாக சுருங்கிவிட்டது என்றார் காஃப்கா. குழந்தைகளின் உலகம் இன்னும் மோசம். பெற்றோர்களின் ஆதிக்கமும் பள்ளிக் கூடங்களின் அதிகாரமும் அதனை சிறைக் கூடமாக மாற்றிவிட்டன. பிரச்சாரமோ, கண்ணீர் துளிகளோ எதுவுமின்றி த்ரூபோ இதனை துல்லியமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.
அத்துடன், தண்டனைகள் குற்றவாளிகளை திருத்துவதைவிட, குற்றங்களையும் குற்றவாளிகளையும் அதிகரிக்கவே துணைபோகின்றன என்பதையும் த்ரூபோவின் திரைப்படம் வெளிச்சமிட்டு காட்டுகிறது.
ஒரு நாள் காலை நேரத்தில் அவசர அவசரமாக பள்ளிக்குச் செல்கிறான் அந்த்யோன். வழியில் எதிர்படும் நண்பன் ரெனே, பள்ளிக்கு நேரமாகிவிட்டது. இனி சென்றால் வாத்தியார் உள்ளேயா விடப்போகிறார் என்று, அந்த்யோனை திரையரங்குக்கு அழைத்துச் செல்கிறான்.
|