கணவர் இருக்கும்வரை எதற்கும் பயமில்லை - மம்தா மோகன்தாஸ்
திங்கள், 25 ஜூன் 2012( 08:45 IST )
webdunia photo
WD
தடையறத்தாக்க படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார் மம்தா மோகன்தாஸ். மற்ற நடிகைகளுடன் ஒப்பிடுகையில் மம்தா ஒரு ஆச்சரியம். மிகக் கொடிய கேன்சர் நோய் தாக்கிய பிறகும் மன தைரியத்துடன் அதிலிருந்து முழுமையாக மீண்டிருக்கிறார். தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடங்கியிருக்கும் அவருடனான உரையாடலிலிருந்து...
உங்கனை இப்போது எல்லோரும் ஒரு ஆச்சரியமாகதான் பார்க்கிறார்கள்...?
கேன்சரிலிருந்து நான் முழுமையாக விடுபட்டதனால் அப்படி இருக்கலாம். எனக்கு கேன்சர் என்று சொன்ன போது ரொம்ப ஷாக்காக இருந்தது. அம்மா, அப்பா துவண்டு போயிட்டாங்க. ஆனா சின்ன வயசிலிருந்தே நான் எதுக்கும் ஷேக் ஆகிறது இல்லை. நம்பிக்கையோடு சிகிச்சை எடுத்துகிட்டேன். அந்த நம்பிக்கைதான் என்னை காப்பாத்தியிருக்கு.
கேன்சருக்கான சிகிச்சை முதலில் உடம்பைதான் பாதிக்கும். அதாவது ஒருவரின் அழகை. ஒரு நடிகையாக இதை எப்படி எதிர் கொண்டீங்க?
கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக் கொண்ட போது தலைமுடியெல்லாம் கொட்ட ஆரம்பிச்சது. அப்போது மலையாளப் படம் அன்வரில் நடிச்சுகிட்டிருந்தேன். முடி கொட்டுவது என்னால் தாங்க முடியாததாக இருந்தது. பாய் கட் பண்ணிக் கொண்டேன். அந்தப் படத்தில் விக் வைத்தும், தலைமுடியை மறைத்தும் சில காட்சிகளில் நடிக்க வேண்டியதாக இருந்தது. கேன்சருக்கான மாத்திரைகளையும், சிகிச்சைகளையும் என்னுடைய உடல் ஏற்றுக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
webdunia photo
WD
இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறீர்களே...
என்னுடைய இன்டஸ்ட்ரி நண்பர்களுக்குதான் நன்றி சொல்லணும். அவங்க எனக்காக காத்திருந்தார்கள். கேன்சரிலிருந்து மீண்டு வந்ததும் தெலுங்கு சினிமாதான் எனக்கு வாய்ப்பு தந்தது. தடையறத்தாக்க படத்தில் நடித்தது தமிழில் ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது. தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வரும் என்று நம்பறேன்.
உங்கள் சினிமா பிரவேசம் எப்படி நடந்தது?
அது பழைய கதை. 2005 ல் இயக்குனர் ஹரிகரன் தன்னோட மயூகம் படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார். 2006 ல் தமிழ். கரு.பழனியப்பனின் சிவப்பதிகாரம். 2007 ல் தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமௌலியின் யமதொங்கா. அப்புறம் கன்னடத்தில் கூலிங்கிற படம்.
நீங்க நல்ல பாடகி. தொடர்ந்து பாடுவீர்களா?
கர்னாட்டிக், ஹிந்துஸ்தானி இரண்டும் முறையா படிச்சிருக்கேன். தெலுங்குப் படம் ராக்கியில்தான் முதல்முறையா பாடினேன். தேவி ஸ்ரீ பிரசாத் மியூஸிக். பாடுவது எனக்குப் பிடிக்கும். ஃபிலிம்பேர் விருதுகூட கிடைச்சிருக்கு. வாய்ப்பு வந்தால் நிச்சயம் பாடுவேன்.
webdunia photo
WD
திடீரென திருமணம் செய்து கொண்டீர்களே...?
என்னுடைய கணவர் ப்ரெஜித் பத்மநாபன் நீண்டகால நண்பர். கேன்சர் சிகிச்சை எடுத்துகிட்ட போது பக்கத்தில் இருந்து பார்த்துகிட்டார். அவரது அன்பும் அரவணைப்பும்தான் நான் கேன்சரிலிருந்து மீண்டடுவர முக்கிய காரணம். அவர் இருக்கும்வரை எனக்கு எந்த பயமும் இல்லை.
மலையாள சேனலில் கையில் ஒரு கோடி நிகழ்ச்சி நடத்துகிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
ரொம்ப ரசித்து செய்றேன். பல்வேறு தரப்பு மக்களை சந்திக்க முடியுது. அதுதான் அந்த நிகழ்ச்சியோட முதல் சந்தோஷம்.