அண்மையில் வெளிவந்திருக்கும் படம் "ரசிகர் மன்றம்". படத்திலல் பரவலாகக் கவனிக்கப்பட்ட ஒன்று "தப்பெடுத்து அடிக்கையிலே பாடல் கருத்துச் செறிவுடனும் எழுச்சி வார்த்தைகளுடனும் இருக்கும் இந்த ஒரு பாடலே படத்தின் முழுக் கருத்தையும் சொல்கிறது. அதை எழுதியிருப்பவர் ஒரு மாணவி. பெயர் கதிர்மொழி. நாமக்கல் மாவட்டம் வைப்ப மலை இவரது சொந்த ஊர். சுதா இவரது இயற்பெயர்.
பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் பெற்றோருக்காகப் படித்தவர் தனக்காகப் படித்தது எம்.ஏ.தமிழ். அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ.வில் தங்கப்பதக்கம் வென்றவர். அதன்பிறகு படித்த எம்.பில் படிப்பிலும் தங்கம் வென்றவர். இப்போது பி.எச்.டி ஆய்வு செய்து வருகிறார்."
சரி சினிமாவுக்குப் பாட்டெழுத வந்தது எப்படி
"நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள். எங்கள் அப்பா எங்கள் ஊரில் கூட்டுறவு வங்கியில் பியூன். அம்மா அதே வங்கியில் விற்பனை பிரிவில் வேலை பார்க்கிறார். என்னை படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது அவர்கள் ஆசை. அதனால் பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். ஆனால் கல்லூரி வாழ்க்கை என் போக்கை மாற்றிவிட்டது. அரூர் முத்துகளைக் கல்லூரியில் அசோகன் ஐயாதான் எனக்குத் தமிழார்வத்தை தூண்டி வளர்த்துவிட்டவர். மாணவர்களுக்கு தலைப்பு கொடுத்து கவிதை எழுதச் சொல்வார். எனக்குள் இருந்த கவிஞரைக் கண்டுபிடித்து எனக்கே அறிமுகம் செய்தவர் அவர். விளைவு? 160 கல்லூரிகள் பங்கேற்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசும் பதக்கமும் கிடைத்தது. வழங்கியவர் கவிக்கோ அப்துல் ரகுமான்." என்கிற கதிர்மொழியின் கவனம் கம்ப்யூட்டர் சயின்ஸிலிருந்து கவிதையின் பக்கம் திரும்பியிருக்கிறது. அந்தக் கல்லூரிப் பருவத்தில் தானாம்.
சினிமாவுக்கு பாடல் எழுதுகிற பெண் கவிஞர்கள் மிகக் குறைவு. சினிமாத்துறையின் தட்ப வெப்பநிலையில் தாக்குப் பிடிக்காமல் போய்விடுகிறார்கள். கதிர்மொழி எப்படி நிற்கப் போகிறார்?
"பெண்கள் படிப்பதே சிரமமாக இருந்தது. வேலைக்குப் போவது சிரமமாக இருந்தது. பிறகு வெளியூருக்கு வேலை போவது முடியவில்லை. பிறகு சினிமாவுக்கு போவது கடினமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு தடையையும் கடந்து பெண்கள் முன்னேறிந்த கூண்டு தான் இருக்கிறார்கள். இன்று தாமரை தனக்கென தனியிடம் பிடித்த கவிஞராக இருக்கிறார். அது போலவே நானும் வரவேண்டம் என்று நினைக்கிறேன். சினிமாவில் பெண்கள் ஈடுபாடு கொள்வதை இந்தச் சமூகம் தவறாகப் பார்க்கிறது. இது ஒரு பக்கம். வீட்டுச் சூழலிலிருந்து மீண்டு வெளியில் வந்து சினிமாவில் ஈடுபடுவதில் உள்ள சிக்கல் ஒரு பக்கம் என பெண்களுக்குப் பல தடைகள். இவற்றை எதிர்கொள்வது சிரமமாக நினைத்து தயங்கி விடுகிறார்கள். இப்போது காலம் மாறிவருகிறது" என்கிறார்.
திரைப்பாடல்கள் என்றால் ஆங்கிலமும் ஆபாசமும் கலந்து எழுதுவது இன்று சகஜமாகி வருகிறது கதிர்மொழியும் இதைச் செய்வாரா?
"நான் நிச்சயமாக அதைச் செய்ய மாட்டேன். தமிழில் எதையும் சொல்ல முடியும். தமிழில் முடியாவிட்டால் தானே வேறு மொழிக்குச் செல்ல வேண்டும். பாடல்களில் நல்ல தமிழையும் இலக்கித் தரத்தையும் கொண்டுவரவே நான் விரும்புகிறேன்" என்கிறார் தீர்மானமாக.
|