டிசம்பரில் வாடா

வியாழன், 5 நவம்பர் 2009( 14:07 IST )
எப்போது படப்பிடிப்பு நடத்துகிறார், எப்போது படுத்து தூங்குகிறார்? யாருக்கும் தெரியாது. மூன்று மாதத்துக்கொருமுறை படம் மட்டும் டாணென்று ரிலீஸாகிவிடுகிறது. வேகத்தைப் பொறுத்தவரை கே.எஸ்.ரவிக்குமாரெல்லாம் இவருக்கு ரொம்ம்ம்...ப பின்னால்.
ஏ.வெங்கடேஷை பற்றிதான் சொல்கிறோம். மலை மலை படத்தை இயக்கியவர் மாஞ்சா வேலு படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டுக்கும் நடுவில் வாடா படத்தை முடித்து ரிலீஸுக்கும் கொண்டு வந்திருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.
வாடா படத்தில் சுந்தர் சி., ஷெரில் பிரிண்ட்டோ நடித்துள்ளனர். காமெடி என்ற பெயரில் மிமிக்கிரியும், மாறு வேஷமும் போட்டு இம்சிக்கும் விவேக் இதிலும் உண்டு. இந்தப் படத்தில் அவர் போட்டிருக்கும் மாறு வேசம், சுருளிராஜன். சுருளியின் ஆத்மா இதனை பொறுத்தருளட்டும்.
வாடா படத்தின் ஹைலைட், முதல் முறையாக சுந்தர் சி-யின் நிஜ ஹீரோயின் குஷ்பு இந்தப் படத்தில் என்னடி ராக்கம்மா ரீமிக்சுக்கு சுந்தர் சி-யுடன் இணைந்து ஆடியிருக்கிறார். படத்தை விளம்பரப்படுத்த இது ஒன்று போதும்.
டிசம்பரில் வாடா திரைக்கு வருகிறது. அதற்குள் வெங்கடேஷ் இன்னொரு படத்தை முடித்தால் ஆச்சரியப்படாதீர்கள். முன்பே சொன்னது போல் அவருடைய வேகம் அப்படி.