அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாலும் அநியாயத்துக்கு அடக்கமாக இருக்கிறார் ஷம்மு. மாத்தியோசி படப்பிடிப்பில் ஒரு அசிஸ்டெண்டை போல் இறங்கி வேலை செய்கிறாராம் இந்த ஹீரோயின்.
நடிகைகளில் ஒரு சிலர் மட்டுமே நடிப்பைத் தாண்டி இயக்கம் குறித்து யோசிப்பவர்கள். சுஹாசினி, ரேவதி என இந்த வட்டம் மிகமிகச் சிறியது. இந்த சிறிய வட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள இளம் நடிகைகள் ஆவலாக இருக்கிறார்கள்.
மதுமிதாவின் வல்லமை தாராயோ படத்தில் நடித்த பிறகு சாயாசிங்கை இயக்குனர் ஆசை பிடித்தாட்டுகிறது. ஷெரீன் கதை தயார் செய்து நல்ல புரொடியூசருக்காக காத்திருக்கிறார். ஷம்முவுக்கும் படம் இயக்குவது கனவு.
மாத்தியோசி படப்பிடிப்பில் ஷாட் முடிந்ததும் ஓரமாக சாய்ந்துவிடாமல் இயக்குனர் நந்தா பெரியசாமி என்னென்ன செய்கிறார் என்பதை உன்னிப்பாக கவனிக்கிறார். சின்னச் சின்ன வேலைகள் செய்கிறார். ஏறக்குறைய ஒரு அசிஸ்டெண்டை போல் நடந்து கொள்கிறார் என நற்சான்றிதழ் தருகிறார் நந்தா பெரியசாமி.
ஏன் இந்த கரிசனம்? ஷம்முவிடம் கேட்டால், அதுக்குதானே அமெரிக்காவிலிருந்து வந்திருக்கேன் என்றார் பூடகமாக. சினிமாவின் அத்தனை விஷயங்களையும் குறிப்பாக இயக்கம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இவரது விருப்பம். விரைவில் படம் இயக்கும் எண்ணம் இருப்பதால் மேக்கப்புடன் நின்றுவிடாமல் பேக்கப் சொல்லும் வரை ஸ்பாட்டில் இருந்து ஒவ்வொரு அசைவையும் கவனிக்கிறார்.
தமிழுக்கு இன்னொரு பெண் இயக்குனர் கிடைப்பது நல்லதுதானே.