கதையை பேனாவால் எழுதுகிறாரா இல்லை அரிவாளால் தீட்டுகிறாரா? சஞ்சய் ராம் என்றாலே ஒதுங்கிதான் போகிறார்கள் அனைவரும். கொலையும், கொலை சார்ந்த கதைக்களன்களே இவர் இயக்கும் அனைத்துப் படங்களும்.
பூவா தலையா அதிலிருந்து கொஞ்சம் மாறுதல். வழக்கமான தாசி, தடபுடல் வில்லன்கள் இந்தப் படத்தில் இருந்தாலும் கலர்ஃபுல் காதலும் வருகிறது.
கொம்புதேவன் என்ற காரோட்டியாக வருகிறார் கிருஷ்ணகுமார். தஞ்சாவூரில் டாக்சி ஓட்டுகிறவர். நாயகி ஷெரீனோ அக்ரஹாரத்துவாசி. பாட்டு கற்பதற்காக ஷெரீன் தினமும் கொம்புதேவனின் டாக்சியில் திருவையாறு செல்வது வழக்கம்.
ஒரு நாள் திருவையாறில் வைத்து ஷெரீனிடம் கலாட்டா செய்கிறான் லோக்கல் வில்லன் பூமிநாதனின் அடியாள். அவனை அறைந்து விடுகிறார் ஷெரீன். அவன் தனது குரு பூமிநாதனுடன் வந்து ஷெரீனிடம் பிரச்சனை செய்கிறான்.
ஹீரோ கொம்புதேவன் வில்லன்களை புரட்டி எடுப்பார் என அவசரப்பட்டு நீங்கள் முடிவு செய்தால் ஏமாந்தீர்கள். ஷெரீன் அவனை அடித்ததற்குப் பதிலாக அவன் தரும் அடியை கொம்புதேவன் வாங்கிக் கொள்கிறான். அப்புறமென்ன.. காதல்தான்... டூயட்தான்...
கொடுவா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் உதயாவும், விலைமாதுவாக மேகா நாயரும் நடித்துள்ளனர். படம் இம்மாதம் திரைக்கு வருகிறது.