தமிழ் சினிமாவில் மாறாதவை என்று சில உண்டு. சேட்டுகள் சரளமாக தமிழ் பேசக் கற்று பல காலம் ஆகிறது. ஆனால் இந்த சேதி இன்னும் தமிழ் சினிமாவைப் போய்ச் சேரவில்லை.
தலையில் குல்லா மாட்டி, கையில் கோலுடன் நம்பள், நிம்பள் என்று தமிழை மென்று துப்பினால் மட்டுமே தமிழ் சினிமாவில் அவர் சேட். மலையாளிகள் குறித்த சித்திரம் இன்னும் விசேஷம். ஒரு டீக்கடை, அதில் வத்தலாக ஒரு நாயர், சாயா எடுத்துக் கொடுக்க ஷகிலா சைஸில் நாயரின் மனைவி! திருமதி நாயர் உதட்டை அழுத்தி, புட்டு வேணுமா என்று கேட்கும் டயலாக் கண்டிப்பாக உண்டு.
தமிழர்களுக்கு அரசியல் பார்வை சிறிது மங்கல் என்பதால், திருமதி நாயரின் முண்டோடும், மாராப்பு இல்லாத ஜாக்கெட்டோடும் தங்களது சித்தரிப்பை நிறுத்திக் கொண்டார்கள்.
மலையாளிகள் அப்படி அல்லவே! என்ன இருந்தாலும் கேரளா சோஷலிச பூமி. தத்துவங்கள் செழித்து வளர்ந்த நாடு. அரசியல் அறிவோ வெகு விசேஷம். மலையாளப் படங்களில் தமிழர் குறித்த சித்தரிப்பு, நம்மைப் போல், முண்டு ஜாக்கெட் என ஆடையோடு முடிந்து விடும் ஒரு படித்தானது அல்ல. காளி கையிலிருக்கும் சூலம் மாதிரி பல்முனைகள் கொண்டது! (குத்தினால் ஆள் குளோஸ்)
மலையாள திரைப்படங்களில் தமிழர்களை குறிக்கும் விசேஷ பெயர், பாண்டி! மூன்றெழுத்துப் பெயர் என்றாலும் பாண்டிக்கு அர்த்தங்கள் முன்நூறு. குளிக்காதவன்...இப்படி! ஏதாவது ஒரு மலையாளியை, பாண்டி மாதிரி இருக்கிறியே என்றால் போதும்; லாரியில் அடிபட்ட மாதிரி சிதறிப் போவான்.
அக்கரை அக்கரை அக்கரை என்றொரு படம். ப்ரியதர்ஷன் இயக்கியது. கடத்தல்காரன் ஒருவனை கண்டுபிடிக்க அமெரிக்கா செல்லும் மோகன்லால், அங்குள்ள உயரமான கட்டடங்களைப் பார்த்து பிரமித்தவாறு, அருகிலிருக்கும் சீனிவாசனிடம் இப்படிச் சொல்வார்; ''எல்.ஐ.சி. பில்டிங்கைப் பார்த்து வாய் பிளக்கும் தமிழர்கள், இதைப் பார்த்தால் நெஞ்சு வெடிச்சு செத்திடுவான்களே!''
முன்பு சென்னை வரும் மலையாளிகளின் முக்கிய டூரிஸ்ட் ஸ்பாட்டாக எல்.ஐ.சி. இருந்தது. அண்ணாந்து பார்க்க எஸ்.ஐ.சி. போலொரு கட்டடம் அன்று கேரளாவில் இல்லை. அந்த பொச்செரிச்சலில் அவலை நினைத்து இடித்த உரல்தான் மேலே உள்ள மோகன் லாலின் பேச்சு.
மற்றொரு படம், சுரேஷ் கோபி நடித்தது. பெரிய பீர் போத்தல் போலிருக்கும் நடிகர் ராஜூ போலீஸ் அதிகாரி. வழக்கம் போல ஒரு தமிழ் அடிபொடி வில்லன். அடிபொடி ராஜூவை பார்த்து கேட்பார்; ''நீ பொன்னுசாமி இல்லையா?'' தெரியாமல் சாணியை மிதித்த தொணியில் ராஜூ சொல்வார்; ''என்னது... பொன்னுச்சாமியா? நான் நல்ல ஐயங்கார் குடும்பத்துல பிறந்தவனாக்கும்.''
தமிழ்ப் பெயர்களான குப்புசாமி, பொன்னுசாமியெல்லாம் மலையாளிகளைப் பொறுத்தவரை தரக்குறைவானவை. முருகன், செல்வம் முதலான பெயர்களை வைக்க முன்பு தலித்துகளுக்கு அனுமதியில்லை. மீறி வைத்தார்கள் ஆதிக்கச் சாதியினரால் தண்டிக்கப்பட்டனர். மாடன், இருளன் போன்ற பெயர்களே அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ராஜூவின் பேச்சில் ஒலிப்பதும் அந்த ஆதிக்கச் சாதியினரின் மனோ நிலைதான்.
திரைப்படங்களில் நாம் மறந்தும் அரசியலை தொடுவதில்லை. முதலமைச்சர் கனவுடன் திரியும் நடிகர்களும், அரசியல் வேறு சினிமா வேறு என்று இரண்டையும் உஷாராக பிரித்தே வைத்திருக்கிறார்கள். நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்டுக் கொண்டே, மகளிர் முன்னேற்றம் குறித்துப் பேச இதுவொரு செளகரியம்.
மலையாளிகள் வேறுமாதிரி. திரைப்படங்களில் அரசியல் பேசுவது அவர்களுக்கு கப்பையும், கள்ளும், கருமீனும் ஒன்றாக கிடைத்த மாதிரி. அதுவும் முல்லைப் பெரியாறு என்றால் கொள்ளை இன்பம், கூத்தாடி விடுவார்கள்!
மோகன்லாலின் உடையோன் படத்தின் வில்லன் சலீம்கெளஸ் ஒரு தமிழன். தமிழன் சொல்வான், ''தமிழ்நாட்டுல மழை பெஞ்சா உங்க கிணத்துல தண்ணி'' லாலுக்கு நக்கல் அதிகம். அவர் சொல்வார், '' அதுக்கு உங்க ஊர்ல மழை பெஞ்சாதானே!'' இன்னொரு காட்சி. தமிழ் வில்லன் சொல்வார், ''தமிழ்நாட்டு கரும்பு சாப்பிடுங்க, தேன் மாதிரி.'' பதிலடி பின்னாலேயே வரும். ''எங்க ஊர் தண்ணியே தேன் மாதிரிதான்!'' |