தொண்ணூறுகளின் இறுதிவரை சினிமா குறித்த தனித்த புத்தகங்கள் தமிழில் குறைவு. திரைக்கதை எப்படி எழுதுவது என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் ஆங்கிலப் புத்தகத்தைதான் தேடிப் போக வேண்டும். உலக சினிமா குறித்து அறிய, எப்போதாவது அயல்நாட்டு திரைப்படங்களை திரையிடும் ICAF போன்ற தனியார் அமைப்புகள்தான் ஒரே வழி.
இன்று நிலைமை மாறியிருக்கிறது. சினிமா குறித்த ஏராளமான புத்தகங்கள் தமிழில் வெளிவருகின்றன. தமிழ் புத்தக வர்த்தகத்தில் சினிமா புத்தகங்கள் கணிசமான இடத்தை பிடித்துள்ளன. நடந்து முடிந்த 31வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இதனை உணர முடிந்தது.
புத்தகக் காட்சியையொட்டி ஏராளமான திரைப்படம் சார்ந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டன. உயிர்மை, காலச்சுவடு, தென்திசை, வம்சி, கழிக்குப் பதிப்பகம், நக்கீரன் என ஏராளமான பதிப்பகங்கள் திரைப்படம் சார்ந்து அதிக எண்ணிக்கையில் புத்தகங்களை வெளியிட்டன.
'கல்லூரி' படத்தின் ஒளிப்பதிளாளரும் விமர்சகருமான செழியன் எழுதிய சினிமா குறித்த விமர்சன கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வந்துள்ளது. இவரது எழுத்தில் வந்துள்ள இன்னொரு புத்தகம் 'உலக சினிமா'.
இயக்குனர் வஸந்த், விக்ரமன் இயக்கிய திரைப்படங்களின் திரைக்கதையை போதி பதிக்ககம் வெளியிட்டுள்ளது. காவ்யா பதிப்பகம் தங்கர் பச்சானின் 'அழகி' திரைக்கதையையும், அன்னம் பதிப்பகம் 'ஒன்பது ரூபாய் நோட்டு' திரைக்கதையையும் வெளியிட்டுள்ளன.
தியோடர் பாஸ்கரனின் 'எம் தமிழர் செய்த படம்' மற்றும் திருநாவுக்கரசின் 'சொல்லப்படாத சினிமா' இரண்டும் மிக முக்கியமானவை. ஆராய்ச்சி நோக்கில் எழுதப்பட்டவை.
இந்தியாவில் திரை மறுமலர்ச்சியை உருவாக்கிய ரேயின் 'பதேர் பாஞ்சாலி' குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் புத்தகம், ஒரு திரைப்படத்தை எப்படி அணுகுவது என்பதை விளக்கிச் செல்கிறது.
இந்த வருடத்தின் முக்கியமான புத்தகங்களில் ஒன்று சுஜயன் பாலா எழுதிய 'திரைப்பட வரலாறு மெளனயுகம்' மெளனப்பட காலத்தில் முயற்சிகளை, திரைப்படம் தோன்றியதில் இருந்து படிப்படியாக அது வளர்ந்த விதத்தை படங்களுடன் விளக்குகிறது இப்புத்தகம்.
மற்றொரு முக்கிய வரவு, எஸ் ராமகிருஷ்ணனின் 'அயல் சினிமா'. குவென்டின் டெரான்டினோ, வாங் கர் வாய், வால்டர் செலஸ், ஷாங் இழு, டொர்னாடோ குசாபே, பெட்ரோ அல்மதோவர், அலெக்சாண்டர் சுக்ரோவ், ஜேன் கேம்பியான், பூன் பியாதே ஜெனட், கிம் கி டக் ஆகிய பத்து இயக்குனர்கள் பற்றியும் அவர்கள் படங்கள் குறித்தும் இப்புத்தகம் பேசுகிறது. |