வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (16:53 IST)

இந்த தடவை இ சாலா கப் நமதேதான்! – சூசகம் சொல்லும் ஆர்சிபி ரசிகர்கள்!

கொரோனா காரணமாக தடைப்பட்ட ஐபிஎல் போட்டி தற்போது அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் பரவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் நடைபெற இருந்த நிலையில் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு தற்போது அரபு அமீரகத்தில் நடக்க முடிவாகியுள்ளது. 2008 முதலாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றது இல்லை. எனினும் ஆண்டுக்கு ஒருமுறை ஐபிஎல் நடைபெறும்போது “இ சாலா கப் நமதே” என ஆர்சிபி ரசிகர்கள் குதூகலத்துடன் காத்திருப்பதை விடவில்லை.

இந்நிலையில் இந்த முறை ஆர்சிபி நிச்சயம் வெற்றிபெறும் என ரசிகர்கள் சூசகம் சொல்கிறார்கள். கடந்த 2019 ஐபிஎல் போட்டியின்போது ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. போட்டிகளுக்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் ரோகித் ஷர்மா தம்பதியினருக்கு குழந்தை பிறந்திருந்தது.

அதுபோல தற்போது ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவும் கர்ப்பமாக இருக்கிறார். ஜனவரி மாதத்தில் அவருக்கு குழந்தை பிறக்கும் என எதிர்பார்ப்பதாக விராட் கோலி சொல்லியுள்ள நிலையில், ஐபிஎல்லில் கோலி உற்சாகமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வென்று தன் குழந்தைக்கு டெடிகேட் செய்வார் என ஆர்சிபி ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.