1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 21 ஏப்ரல் 2014 (15:52 IST)

நேபாள அரசு சூதாட்ட மையங்களை மூட உத்தரவு

நேபாள அரசு அந்நாட்டிலுள்ள சூதாட்ட மையங்களை சட்டவிரோதமானது என்று அறிவித்து, அவற்றை மூட உத்தரவிட்டுள்ளது.
நேபாளத்திலுள்ள சூதாட்ட மையங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய ராயல்டியை செலுத்தி உரிமங்களைப் புதுப்பிக்காததால் இந்தத் தடை உத்தரவுக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
 
கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக நேபாளத்தில் சூதாட்டங்கள், அரசு அனுமதியுடன் நடைபெற்று வருகின்றன. இந்த சூதாட்ட மையங்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தன. அந்நாட்டு அரசு பலமுறை தொடர்ந்து இதற்குறிய காலக்கெடுவை நீட்டித்து வந்தபோதிலும், சூதாட்ட மையங்கள் பணம் செலுத்தத் தவறியது. இதைத்தொடர்ந்து அந்நாட்டின் பண்பாடு, சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத்துறைகள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
கடந்த 2005-2006ஆம் நிதியாண்டிலிருந்து தொடங்கும் இந்த கட்டண நிலுவையானது தற்போது சுமார் 1000 கோடி என்ற அளவில் உள்ளதென்றும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெற்றுவரும் 10 சூதாட்ட மையங்களை அரசு தடை செய்துள்ளது என்றும் கூறப்படுகின்றது. இவற்றில் 8 சூதாட்ட மையங்கள் தலைநகர் காத்மாண்டுவிலும், மீதி இரண்டு மேற்கு நேபாளின் சுற்றுலா மையமான பொகாராவிலும் இயங்கிவருகின்றன. பலசூதாட்ட மையங்கள் கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தங்களின் உரிமங்களைப் புதுப்பிக்கும் விண்ணப்பங்களை அனுப்பவில்லை, அனுப்பப்ட்டுள்ள விண்ணப்பங்களில், குறிப்பிட்டுள்ள அனைத்து செயல்முறைகளையும் நடைமுறை படுத்தவில்லை என்றும் அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கடந்த 2013ஆம் ஆண்டில் இந்த வர்த்தகத்தை அந்நாட்டுஅரசு முறைப்படுத்தியது. அதன்படி, இந்த மையங்கள் வருமானவரி செலுத்துவதுபோக, அரசுக்கு ராயல்டியாக ஆண்டுதோறும் ரூ.4 கோடி செலுத்த வேண்டும் என்ற புதிய திட்டத்தை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.