வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : புதன், 16 ஏப்ரல் 2014 (18:45 IST)

2300க்கும் மேற்பட்ட SARS வைரஸ் குப்பிகள் மாயம்

பிரான்ஸில் உள்ள ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த  2300க்கும் மேற்பட்ட SARS (Severe acute respiratory syndrome) வைரஸ் குப்பிகள் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  
பாரீஸில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான Pasteur Institute -ல் உள்ள உயர் பாதுகாப்பு ஆய்வகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,349  சார்ஸ் வைரஸ் கிருமிகள் கொண்ட குப்பிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஸ்டர் ஆராய்ச்சி நிறுவனத்தின் கோப்புக்காக சேமிக்கப்பட்டு வைத்திருந்த 2300 க்கும் மேற்பட்ட சார்ஸ் வைரஸ் கிருமி குப்பிகளை கொண்ட 29 பெட்டிகள் எங்கள் நிறுவன குளிர் சாதன கிடங்கிலிருந்து காணாமல் போய்விட்டது.
 

இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு மருந்து மற்றும் சுகாதார பாதுகாப்புத்துறை ஆணையம் கடந்த நான்கு நாட்களாக குப்பிகளை தேடும் பணியை மேற்கொண்டது, எனினும் குப்பிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அறிவித்துள்ளது.
காணாமல் போன குப்பிகளில் இருந்த சார்ஸ் வைரஸ் கிருமிகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக இந்த ஆய்வகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றியவர்கள், பயிற்சி மேற்கொண்டவர்களின் கோப்புகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் , கிருமிகளை ஆய்வாளர்கள் தவறுதலாக ஆதாரங்களை சமர்பிக்காமலே அழித்திருக்க கூடும் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2002 ஆம் ஆண்டு சீனாவில் பரவிய இந்த  SARS வைரஸ் தொற்று 775 பேரை பலிவாங்கியதும், 8000 பேர் பாதிப்படைந்ததும் குறிப்பிடத்தக்கது.