வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 24 மே 2018 (20:47 IST)

டிரம்ப் - கிம் ஜாங்உன் பேச்சுவார்த்தை திடீர் ரத்து

கடந்த சில மாதங்களாக அமெரிக்காவும் வடகொரியாவும் அணு ஆயுத கொள்கை விஷயத்தில் மோதிக்கொண்டதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்தது. அதுமட்டுமின்றி இந்த போர் மூண்டால் அது மூன்றாம் உலகப்போராக மாறும் வாய்ப்பு இருந்ததாக வல்லுனர்கள் எச்சரித்திருந்தனர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் டுவிட்டரிலும் கருத்துமோதல்களை வெளிப்படுத்தினர்.
 
இந்த நிலையில் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் வரும் ஜூன் 12ஆம் தேதி நேரில் சந்திக்கவிருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் அணு ஆயுத கொள்கை குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த சந்திப்புக்காக தேதி மற்றும் நேரமும் உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வந்தது. இந்த சந்திப்பு நடந்தால் இருநாட்டின் நல்லுறவுக்கு அது உதவியாக இருக்கும் என்றும் கருதப்பட்டது.
 
இந்த நிலையில் டிரம்ப்-கிம் ஜான் உன் பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்த ரத்து தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபருக்கு கடிதம் மூலம் தெரிவிவித்துவிட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனால் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு ரத்தானது உறுதி செய்யப்பட்டுள்ளது.