1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 25 ஜூலை 2015 (03:46 IST)

அமெரிக்க திரையங்கில் மர்ம மனிதன் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி 7 பேர் படுகாயம்

அமெரிக்காவில் பிரபல  திரையங்கில் சினிமா பார்த்தவர்கள் மீது மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
 

 
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் ஜான்ஸ்ட்டன் பகுதியில் உள்ளது தி கிராண்ட் என்ற பிரபல சினிமா திரையங்கம். இந்த தியேட்டரில் Train Wreck என்ற திரைப்படம்  ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.
 
அப்போது, சினிமா பார்க்கும் கூட்டத்தில் இருந்து எழுந்த ஒரு நபர், தனது துப்பாக்கியால், அருகில் உள்ளவர்களை எல்லாம் சரமாரியாக தனது துப்பாக்கியால் சுட்டான். இதனால் அங்கிருந்தவர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலா திசையிலும் சிதறி ஓட்டம் பிடித்தனர். சிலர் உயிர் பிழைக்க சீட்டுக்கு அடியில் பதுங்கிக் கொண்டனர். இந்த தகவலை சிலர் தங்களது செல்போன் மூலம் அமெரிக்க காவல்துறைக்கு தெரியப்படுத்தினர்.
 
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை, அந்த சினிமா தியோட்டரை முற்றுகையிட்டு, அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அங்கு 2 பேர் உயிரிழந்ததும், 8 பேர் படுகாயத்துடன்  உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்தனர்.
 
இதனையடுத்து, படுகாயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
 
இதனால், இறந்தவர்கள் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது. இந்த சம்பவம் குறித்து அமெரிக்க காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.