வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 ஜூலை 2019 (17:14 IST)

கம்போடியாவில் ஒலிக்கவிருக்கும் “திருக்குறள்”.. தமிழின் பெருமைக்கு கிடைத்த வெற்றி

திருக்குறளை கம்போடிய அரசு, அந்நாட்டின் பள்ளிப் பாடப்புத்தகத்தில் சேர்ப்பதற்கு ஆணையிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் கம்போடிய அரசு உயரதிகாரிகள், பல்லவ மன்னர்களுக்கும், கம்போடிய மன்னர்களுக்கும் இருந்ததாக கருதப்படும் அரசியல் மற்றும் கலாச்சார ரீதியிலான உறவை குறித்து அறிந்து கொள்ளும் வகையில், தமிழகம் வந்தனர். அப்போது பல்லவ மன்னர்களுக்கும் கம்போடிய மன்னர்களுக்கும் இருந்த நட்புறவை பறைசாற்றும் வகையில், பல சான்றுகளை நேரில் கண்டுச் சென்றனர். அந்த பயணத்தின் எதிரொலியாக கூடிய விரைவில், கம்போடியாவில் ரூ.25 கோடி செலவில் சோழ மன்னன் முதலாம் ராஜேந்திர சோழனுக்கும், கம்போடியாவின் கெமர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சூர்யவர்மனுக்குமான நட்பைப் பறைசாற்றும் வகையில் இருவருக்கும் சிலைகளை அமைக்க கம்போடிய அரசு திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறிப்பாக, தமிழ்நாட்டுக்கும் கம்போடியாவிற்கும் உறவு ரீதியாக பாலம் அமைக்கும் வகையில், சுமார் 1330 குறள்களை கொண்ட பொய்யாமொழி என அழைக்கப்படும், திருக்குறளை, கம்போடிய அரசு அந்நாட்டின் பள்ளிகளில் பாடப்புத்தகத்தில் சேர்க்க ஆணையிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் திருக்குறளை கம்போடியர்களும் கற்கவுள்ளார்கள் என்பது தமிழுக்கு சேர்க்கப்பட்ட ஒரு பெருமையாக பலராலும் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.